Friday, April 5, 2013

இயற்கையின் எதிர்வினை!



ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, கடுமையான பாறைகளை கொண்டு பஞ்சபூதங்களை ஒருங்கிணைத்து, இயற்கை கட்டமைத்த பிரம்மாண்ட மலைகள் இன்று சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை கொண்டும், திறன் மிகுந்த ராட்சத இயந்திரங்களை கொண்டும், அன்றாடங்காய்ச்சிகளாக வாழக்கூடிய மனிதர்களின் சக்தி கொண்டும், சிறிது சிறிதாக தரைமட்டமாக்கபடுதவதை காணும் பொழுதெல்லாம் தொழில்நுட்ப்ப வளர்ச்சியை நினைத்தோ, மனித உழைப்பின் சக்தியை நினைத்தோ புளங்காகிதம் அடைய முடியவில்லை, மாறாக மனிதனின் சுயநலத்தேடல்களுக்காக இயற்கைக்கு எதிராக அவன் ஆற்றி கொண்டிருக்கும் வினைகளுக்கு இயற்கை ஆற்ற இருக்கும் எதிர்வினைகளை நோக்கி கவலைப்பட வேண்டியதாயுள்ளது.

மகிழ்ச்சி!

மகிழ்ச்சி மிகச்சிறந்த அனுபவமாக இருந்தாலும் கூட அதனூடே சிறந்த மனிதர்கள் வடிவமைக்கப்படுவதில்லை, மாறாக கடுமையான வலியை ஏற்படுத்த கூடிய அனுபவங்களும், நெருக்கடி சந்தர்ப்பங்களும் மிகச்சிறந்த மனிதர்களையும், ஆளுமைகளையும் வார்த்தெடுத்து விடுகிறது.

Wednesday, April 3, 2013

ஏர்டெல்!

தற்போது தான் ஏர்டெல் நிர்வாகி பேசினார்.. 
எதுக்காக ஏர்டெல்ல இருந்து மாற விரும்புரிங்கனு தெரிஞ்சக்கலாமா?
இலங்கை போரில ஏர்டெல் செய்த துரோகத்திற்காக ஏர்டெல்ல புறக்கணிக்கறதுனு முடிவு பண்ணி இருக்கோம் அதான்.சிரித்து கொண்டே தொடர்தேன் நீங்களும் இந்த வேலைய விட்டுட்டு வேற நல்ல வேலையா பாருங்க.
அவசர அவசரமாக ஏர்டெல்லை அழைத்ததற்கு நன்றின்னு வச்சிட்டாரு 
#யோவ் நீ தான்யா போன் பண்ண :-)!

கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே!

நம்ம கனவு வியாபாரியும், நாசாவும் கல்பாக்கம் மக்களுக்கு எதாவது 10 அம்ச திட்டம் வச்சி இருப்பாங்களே கொஞ்சம் எடுத்து விடுறது. 

#கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே.

பாரதியின் பிள்ளைகளாய் எழுவோம்!

தனித்தமிழ் ஈழத்திர்கான பொது வாக்கெடுப்பு, இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை, ஈழ மக்களின் மறுவாழ்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களின் போராட்டம் போன்றதொரு போராட்டம் நம் கல்லூரி மாணவர்களாலும் முன்னெடுக்க பட வேண்டும். பொதுவாகவே பெரிய கல்லூரிகளின் படிக்க கூடிய மாணவர்கள் சமூக பிரச்சனைகளில் இருந்து தங்களை தூரப்படுத்தி கொள்ளும் போக்கு இனி மேலும் நமக்கு வேண்டாம். சக மாணவர்களின் போராட்டங்களில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு அவர்களுடன் கூடி போராட நாம் நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். தொழில் நுட்ப ரீதியாக நம் கை மேலோங்கியிருக்க கூடிய நிலையில் நாம் கையிலெடுக்க கூடிய சமூக பிரச்சனைகள் தீர்வுகளை நோக்கி வேகமாக பயணிக்க கூடும். பொருள் சார்ந்த சிந்தனைகள் மனிதர்களான நம் உணர்வுகளை மழுங்கடித்து விடாது என்பதை நிரூபிப்போம். மிக பெரியதொரு சமூக எழுச்சிக்காக உங்கள் 
சிந்தனைகளையும் உணர்வுகளையும் கூர்மைப்படுதுங்கள். 

வெடிப்புற பேசுவோம், வீரியம் பெருக்குவோம், வையத்தலைமை கொள்வோம், பாரதியின் பிள்ளைகளாய் எழுவோம். 

#ஈழம் என்றல்ல அனைத்து சமூக பிரச்சனைகளிலும், சக மனிதனாய் எழுவோம். சமூக மாற்றத்தை துரிதப்படுத்துவோம். அரசியலை மாற்றியமைப்போம்.

மனிதனாக முழுமை அடைவது!

பல்வேறு சந்தர்பங்களில் ஏற்படுகின்ற மனத்தாக்கங்களை திறந்த மனதோடு தன்னுள் பயணிக்க அனுமதித்து, அவை ஏற்படுத்த கூடிய மெல்லிய மாற்றங்களை தக்க வைத்து கொள்பவனே மனிதனாக முழுமை அடைகிறான்.

உண்மையான மனிதன்!

உண்மையான ஹிந்து, உண்மையான முஸ்லிம், உண்மையான கிறிஸ்துவன் என சிதறி கிடக்கும் மதவாத கூட்டத்திற்கு நடுவே உண்மையான மனிதர்களின் கடைசி தடயங்கள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு வருகின்றது. 
#எந்த ஒரு மனிதனல்லாத உண்மையான மதவாதியையும் கடுமையாக எதிர்க்கிறேன்

"நான் உங்களை நேசிக்கிறேன்"

நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களோடு அதிக நேரம் செலவிடவும், கல்லூரி நாட்களை பற்றி அசை போடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மனதில் நினைத்த உடனே நினைவுகள் மூலம் கடந்து வந்த அனைத்தையும் அருகில் கொண்டு வந்து விடுகிற கலையை கடந்த சில வருடங்களும், கடந்து வந்த சில மனிதர்களும் எனக்கு சொல்லி கொடுத்து விட்டார்கள். 

இயற்கை மகிழ்ச்சிக்கான விதைகளை என்னிடத்தில் சற்று அதிகமாகவே புதைத்து விட்டது போல, எத்தனை நண்பர்கள், சொந்தங்கள்! மனத்தொய்வுகளுக்கு நடுவே இவர்கள் அன்பை கொண்டு செய்யும் மோடி மஸ்தான் வித்தை இருக்கிறதே.. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இன்ப துளிர்களும், தொய்வுகளும் மாறி மாறி வருவது கூட ரோலர் கோஸ்டர் பயணத்தை போன்றதொரு மயிர்கூச்சரியும் அனுபவமாக தான் இருக்கிறது.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பின் வழியே என்னை உயிர்ப்போடு வைத்து இருக்கும் உள்ளங்களுக்கெல்லாம் சொல்லி கொள்ள விரும்புவது -

"நான் உங்களை நேசிக்கிறேன்"

#எசஸ்க்யுஸ் மீ ஜென்டில்மென் - காதலர் தின ஜுரத்திற்கு நடுவே இப்படியொரு பதிவை போட்டதற்கு :-)!

கொள்ளையடிக்கப்பட்டவை!



வீணடிக்கப்படும் ஒவ்வொரு பருக்கை உணவும் பசியோடு இருக்கும் ஒரு உயிரின் 'எதோ ஒரு செல்லின்' வாழ்நாளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை!

டவுன் பஸ் ஞானி!

வாயை மூட கற்று கொண்டு விட்டால் கவனிக்க தொடங்கி விடலாம்;
வாயோடு கண்களையும் மூட பழகி விட்டால் சிந்திக்க பழகி விடலாம்;
வாய் மற்றும் கண்ணோடு காதையும் சேர்த்து மூட முடிந்து விட்டால் ஞானி ஆகி விடலாம்! 
#டவுன் பஸ்ஸில் சீட் கிடைத்த சந்தோஷத்தில் சிந்தித்தது :-)

சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை!

தன்னெழுச்சியாக பரவி வரும் மாணவர் போராட்டங்களை பார்க்கும் பொழுது இறந்து போன நம்பிக்கைகள் துளிர்த்தெழ ஆரம்பித்துள்ளன. என் தலைமுறையை சார்ந்த சக வயது காரர்ககள் மேல் இருந்த கவலைகள், கோபங்கள், வருத்தங்கள் இந்த மாணவர்களின் எழுச்சியின் முன் அர்த்தம்மற்றதாய் ஆகி விட்டன. சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை வென்று விடுவோம் என்பதை தவிர.

உணர்வுகளின் எழுச்சி!

பொய் பிரச்சாரங்களும், போலி குற்றச்சாட்டுகளும் உணர்வுகளை எழுச்சி பெற செய்யுமே தவிர வீழ்த்தி விடாது. 

#கூடங்குளம்!

போதும் துருப்பு சீட்டுகள்!

பல லட்சம் உயிர்களின் சாம்பலை பார்த்தும் மௌனத்தை கலைக்கவில்லை இந்த உலகம், இறந்து சாம்பலானது போதும் நின்று போராடி நியாயம் கேட்க வேண்டிய நேரம் இது. நம் கையில் 2 லட்சம் உயிர்கள் துருப்பு சீட்டுகளாக இருக்கிறது இதற்கு மேலும் ஒரு துருப்பு சீட்டு வேண்டாம். இனிமேலும் ஒரு உயிரை நாம் இழந்து விட கூடாது.

ஜெய்ஹிந்த்!

இலங்கை கடற்படையினரின் பிடியில் இருக்கும் சகோதரனின் பிரிவின் வலியை உணர்த்தும் அந்த சிறுமியின் அழுகை என்னவோ செய்கிறது.
#மிக முக்கியம் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு. ஜெய்ஹிந்த்!

மனநிலைக்கு பதில் சொல்லுதல் !

ஒருவரின் மனநிலைக்கு பதில் சொல்வதென்பது நீரில் விழுந்த தேளை காப்பாற்றிய யோகியின் கதை தான். 
#நீதி: நீங்கள் யோகியாக இருந்தால் மட்டும் மனநிலைக்கு பதில் சொல்லுங்கள்.

Tuesday, April 2, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 10!




விலைவாசிகளை அதிகரிப்பதிலும்;

பொருளாதார இடைவெளியை விரிவுப்படுத்துவதிலும்;

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குவதிலும்;

மக்களை பொருள் நெருக்கடியில் சிக்க வைத்து அவர்களை இயங்க விடாமல் செய்வதிலும்;

வளர்ச்சி என்ற மாயையை கொண்டு மனிதத்தை சிதைப்பதிலும்;

சுற்றுச்சுழலை  பாழ்படுத்துவதிலும்;

அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் ஊழல்வாதிகளாக  மாற்றுவதிலும்;

நேர்மையாக இயங்க விரும்பும் வெகு சிலரையும்  இல்லாமல் செய்வதிலும்;

தங்கள் விருப்பு, வெறுப்பு, லாப நஷ்டத்திற்காக சட்டங்களை வலைப்பதிலும்;

அநியாயமான நியாயங்களை வகுப்பதிலும்;

நீதி கேட்டு நடக்க கூடிய போராட்டங்களை சிதைப்பதிலும்;

அந்நிய சக்திகளுக்காக இந்தியாவை தாரை வார்த்து கொடுப்பதிலும்;

இந்த பெரு முதலாளிகளின் கை ஓங்கி கொண்டே இருக்கிறது.          




அதிக அளவிலான குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களை  உருவாக்குவதன் மூலம் பெருமளவு மக்களை பொருளாதார அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு விட முடியும், அதே நேரத்தில் கட்டுக்கடங்கா சக்திகளையும், அதிகாரங்களையும் குவித்து வைத்திருக்க கூடிய இந்த பெரு முதலாளிகளை அடித்து விரட்டி விட முடியும்.

பல ஆயிரம் வருடங்களாக நம் மரபணுவில் பதிந்து விட்ட அடிமை செல்களை  உடைத்தெறிந்து இதை நம்மால் சாத்தியப்படுத்தி விட முடியுமா?

முடிந்தால் சிந்தியுங்கள்!