Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, November 5, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 11!

இன்றைய சுழலில் நாகரிகம் என நம் சமூகம் சிந்திப்பது அனைத்துமே எதொ ஒரு விதத்தில் கன்சுயுமரிச சிந்தனைகளை நமக்குள் விதைப்பவைகளாக தான் இருக்கின்றன. 

மனிதர்களை ஆழ்ந்து நேசிக்க கூடிய மனநிலை சுருங்கி, தேவையின் அடிப்படையிலான நட்பு, உறவு, காதல் என்ற கன்சுயுமரிச மனநிலை சமூகத்தின் நிச்சயத்தன்மையை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றன. பெருகி வரும் முதியோர் இல்லங்களும், ஆதரவற்றோர் காப்பகங்களும், விவாகரத்து வழக்குகளும், ப்ரேக் அப்களும், துரோகங்களும், ரோட்டோர பிச்சைக்காரர்களும், அநாதை பிணங்களும், வன்ப்புணர்வுகளும் இதைத்தான் நமக்கு சொல்லி கொண்டிருக்கின்றன.

கார்ப்பரேட்களும், மீடியாக்களும் சேர்ந்து கட்டமைக்கும் நாகரிகங்களை தூக்கி சாக்கடையில் வீசி விட்டு, நாகரிகமான மனிதர்களாக சக மனிதர்களை நேசிப்போம்.

முடிந்தால் சிந்தியுங்கள்.

Wednesday, June 12, 2013

இயற்கையை போற்றி வளர்த்திடுவோம்!

காகித கப்பில் டீ குடித்து
பிளாஸ்டிக் பாட்டிலில் நீர் அருந்தி
தெர்மாகோல் ப்ளேட்டில் சோறுண்டு
கேரி பேக்கில் பொருள் வாங்கி
ஏ சி ரூமில் படுத்துறங்கி
சாயப்பூ உடையணிந்து
கார்பன் மோனக்சைட்டில் பயணித்து
சுவரெல்லாம் போஸ்டர் ஒட்டி
செவிக்கிழிய பேசிடுவோம் - இயற்கையை
போற்றி வளர்த்திடுவோம்!

தூப்புக்காரி !

வார்த்தைகளால் ஜாலம் செய்யாமல்,போலியான விறு விறுப்புகளுக்காக மெனக்கெடாமல்; வலிகளையும், ரணங்களையும் கொண்டு மெய் சிலிர்க்க
வைத்து விட்டார் மலர்வதி. நெஞ்சில் கணத்தையும், விழிகளில் ஈரத்தையும் சர்வ சாதாரணமாக ஏற்படுத்தக்கூடியவள் இந்த தூப்புக்காரி; இறுதி
பக்கங்களில் வாழைப்பழத்தில் உசியை இறக்குவது போல் இலகுவாக உங்கள் உயிரில் வலியை இறக்கி விடுவாள்.

இரா. நடராசனின் ஆயிஷாவிற்கு பிறகு என்னை நிலை குலைய வைத்த மலர்வதியின் இந்த தூப்புக்காரி கேள்விகள் ஏதும் இன்றி கொண்டாடப்பட வேண்டியவள் தான்..

எல்லாம் வல்ல இயற்கை!

ஒரு நல்லவர் மூன்று மாதங்களில் சென்னையில் குப்பையையே பார்க்க முடியாது என அறிவித்தார் - ஒரு வருடத்திற்கு முன்பு! இந்த உலக சுற்று சுழல்
தினத்திலாவது அவருக்கு நல்ல புத்தியை கொடுக்குமாறு எல்லாம் வல்ல இயற்கையை வேண்டி கொள்கிறேன்..

எது பார்ப்பனீயம்!

பாக்கியம் ராமசாமி எழுதிய "அப்புசாமியும் ஹிப்னாடிச பூனையும்" படித்து கொண்டு இருந்தேன், நல்ல நகைச்சுவையோடும், சுவாரஸ்யமாகவும்,
விறுவிறுப்பாகவும் அமைந்திருந்த கதைக்களம் புத்தகத்தை கீழே வைக்கவே அனுமதிக்கவில்லை; திடீரென கதையின் கடைசி பக்கங்களில் தேச விரோத
சக்திகள், புலிகள், பிரபாகரன் என சம்பந்தமே இல்லாமல் கதை கரைபுரண்டி ஓட ஆரம்பித்தது. இதற்கு பெயர் தான் பார்ப்பனீயம் போல என நொந்து
கொண்டேன்.

ஆதார் அட்டையும்; கழண்ட டவுசரும்!

செத்தாலும் ஆதார் அட்டை வாங்க கூடாது என தீர்க்கமாய் இருந்தவனை, பிறந்த நாள் என்றும் பாராமல் ஆதார்க்கு போட்டோ எடுத்து வந்தால் தான்
சோறு என மிரட்டியதால் வேறு வழி இன்றி அவசர அவசரமாய் குளித்து பொடி நடையாக நடந்து மையத்தை அடைந்தேன், சரி சட்டு புட்டுன்னு
முடிச்சிட்டு கிளம்பிடலாம்னு பார்த்தா ஒரு ஐம்பது, அறுபது பேர் எனக்கு முன்னாடியே துண்ட விரிச்சி உக்காந்திருக்காய்ங்க, அதிலும் ஒரு சிலர்

என்னவோ ஷங்கர் படத்துல நடிக்க சான்ஸ் கேட்டு வந்தவய்ங்க மாதிரி புல் மேக்கப்போட ஆஜர் ஆயிருந்தாங்க. நிலைமையை நொந்து கொண்டே ஒரு
கியூவில் போய் நின்றேன்.

போன வாரம் செம கூட்டம்ல, இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்ல. ஒரு அக்கா உற்சாகத்துடன் சொல்லி கொண்டிருந்தாள்.

இந்த டாமி எப்பவுமே இப்படி தான் கூடவே வந்து தொல்ல பண்ணும். ஏய் ஓடு.. தன் செல்ல பிராணியை துரத்தி கொண்டிருந்தாள் இன்னொரு அக்கா.

பையன் ஊரிலுர்ந்து இப்ப தான் வந்தான், முகம் கழுவ போயிருக்கான். இதோ வந்துடுவான். அங்கு இருந்த ஒரு ஆபிசரிடம் சொல்லி கொண்டிருந்தாள்
பாட்டி ஒருத்தி.

மொதல லெப்ட் கைய வைக்கணும் அப்பறம் ரைட் கைய வைக்கணும் அப்பறம் பெரு விரல் ரெண்டையும் வைக்கணும் அப்பறம் அந்த பைனாகுலர்ல

பாக்கணும். அவ்வளவுதான். ஒரு வயதான பாட்டிக்கு விளக்கி கொண்டிருந்தார் சீனியர் ஒருவர் (ஆமாங்க நமக்கு முன்னாடியே எடுத்துட்டார்ல அப்ப சீனியர் தானே)

தம்பி தலைய நேரா வச்சு இந்த கேமராவ பாரு. முகத்த மேல தூக்கு, கண்ண மூடாத. ஒழுங்க ஒக்காரு. நீண்ட நேரமாக ஒரு சுட்டி சிறுவனிடம்
மன்றாடி கொண்டிருந்தார் ஒரு ஆபீசர்.

யோவ் எனக்கு பின்ன தானே வந்த நீ பாட்டுக்கு முன்ன போற.
அண்ணே அவரு பேஷெண்ட்.
அதுக்கு நான் என்ன பண்றது போய் கியூல வாங்க. எனக்கும் தான் உடம்பு சரி இல்ல.
போங்க போய் கியூல வாங்க.. வந்துட்டானுங்க @#$%^&*():"(பின்னாடி இருந்த அனைவரும் கோரஸாக)
வெற்றி களிப்புடன் ஒரு நடுத்தர வாலிபர்.

அந்த கியு எவ்வளவு வேகமா நகருது இங்க பாருங்க. வழக்கமான பொலம்பலுடன் பக்கத்து ஆசாமி.

டேய் தம்பி மண்ணில விளையாடுவையா பாரு கை ரேகை சரியாவே வர மாட்டேங்குது, ஒரு ரெண்டாவது படிக்கும் சிறுவனிடம் ஆபீசர்.

ஒரு வழியாக பேராக்கு பார்த்து கொண்டே நம் முறையும் வந்தது. அப்படியே போய் பத்து விரல்களின் ரேகைகளையும் கொடுத்து கண் கருவிழியின் ரேகைகளையும் கொடுத்து, க்ளோஸ் அப்பில் (நல்ல வேலை ஆபீசர் பயப்படவில்லை) ஒரு போஸ் கொடுத்து, பெயரில் உள்ள எழுத்து பிழைகளை சரி செய்து ரேஷன் அட்டையை வாங்கி கொண்டு கிளம்பினேன்.

ஆதார் அட்டை என்ற பெயரில் ஒரு மனிதனின் தனித்துவமான பத்து விரல் ரேகைகளையும், கண்ணின் கருவிழி ரேகையையும் பதிவு செய்து தன்

குடிமக்கள் மீது ஒரு கட்டற்ற அதிகாரத்தை நிறுவ முயலும் இந்த திட்டம் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ஒரு மனித உரிமை மீறல் தான்.

பின்னொரு காலத்தில் குடிமக்களின் மரபணு. ஸ்டெம் செல்களை கூட தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த அரசு முயலும் அப்பொழுதும் கூட இந்த
எளிய மக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இதே ஈடுபாட்டுடன் அதை வாரி வழங்குவார்கள்.

காரணம் கேள்வி கேட்பது இங்கு தேச துரோகம்.

Wednesday, April 3, 2013

பாரதியின் பிள்ளைகளாய் எழுவோம்!

தனித்தமிழ் ஈழத்திர்கான பொது வாக்கெடுப்பு, இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை, ஈழ மக்களின் மறுவாழ்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களின் போராட்டம் போன்றதொரு போராட்டம் நம் கல்லூரி மாணவர்களாலும் முன்னெடுக்க பட வேண்டும். பொதுவாகவே பெரிய கல்லூரிகளின் படிக்க கூடிய மாணவர்கள் சமூக பிரச்சனைகளில் இருந்து தங்களை தூரப்படுத்தி கொள்ளும் போக்கு இனி மேலும் நமக்கு வேண்டாம். சக மாணவர்களின் போராட்டங்களில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு அவர்களுடன் கூடி போராட நாம் நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். தொழில் நுட்ப ரீதியாக நம் கை மேலோங்கியிருக்க கூடிய நிலையில் நாம் கையிலெடுக்க கூடிய சமூக பிரச்சனைகள் தீர்வுகளை நோக்கி வேகமாக பயணிக்க கூடும். பொருள் சார்ந்த சிந்தனைகள் மனிதர்களான நம் உணர்வுகளை மழுங்கடித்து விடாது என்பதை நிரூபிப்போம். மிக பெரியதொரு சமூக எழுச்சிக்காக உங்கள் 
சிந்தனைகளையும் உணர்வுகளையும் கூர்மைப்படுதுங்கள். 

வெடிப்புற பேசுவோம், வீரியம் பெருக்குவோம், வையத்தலைமை கொள்வோம், பாரதியின் பிள்ளைகளாய் எழுவோம். 

#ஈழம் என்றல்ல அனைத்து சமூக பிரச்சனைகளிலும், சக மனிதனாய் எழுவோம். சமூக மாற்றத்தை துரிதப்படுத்துவோம். அரசியலை மாற்றியமைப்போம்.

உண்மையான மனிதன்!

உண்மையான ஹிந்து, உண்மையான முஸ்லிம், உண்மையான கிறிஸ்துவன் என சிதறி கிடக்கும் மதவாத கூட்டத்திற்கு நடுவே உண்மையான மனிதர்களின் கடைசி தடயங்கள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு வருகின்றது. 
#எந்த ஒரு மனிதனல்லாத உண்மையான மதவாதியையும் கடுமையாக எதிர்க்கிறேன்

கொள்ளையடிக்கப்பட்டவை!



வீணடிக்கப்படும் ஒவ்வொரு பருக்கை உணவும் பசியோடு இருக்கும் ஒரு உயிரின் 'எதோ ஒரு செல்லின்' வாழ்நாளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை!

சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை!

தன்னெழுச்சியாக பரவி வரும் மாணவர் போராட்டங்களை பார்க்கும் பொழுது இறந்து போன நம்பிக்கைகள் துளிர்த்தெழ ஆரம்பித்துள்ளன. என் தலைமுறையை சார்ந்த சக வயது காரர்ககள் மேல் இருந்த கவலைகள், கோபங்கள், வருத்தங்கள் இந்த மாணவர்களின் எழுச்சியின் முன் அர்த்தம்மற்றதாய் ஆகி விட்டன. சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை வென்று விடுவோம் என்பதை தவிர.

உணர்வுகளின் எழுச்சி!

பொய் பிரச்சாரங்களும், போலி குற்றச்சாட்டுகளும் உணர்வுகளை எழுச்சி பெற செய்யுமே தவிர வீழ்த்தி விடாது. 

#கூடங்குளம்!

போதும் துருப்பு சீட்டுகள்!

பல லட்சம் உயிர்களின் சாம்பலை பார்த்தும் மௌனத்தை கலைக்கவில்லை இந்த உலகம், இறந்து சாம்பலானது போதும் நின்று போராடி நியாயம் கேட்க வேண்டிய நேரம் இது. நம் கையில் 2 லட்சம் உயிர்கள் துருப்பு சீட்டுகளாக இருக்கிறது இதற்கு மேலும் ஒரு துருப்பு சீட்டு வேண்டாம். இனிமேலும் ஒரு உயிரை நாம் இழந்து விட கூடாது.

ஜெய்ஹிந்த்!

இலங்கை கடற்படையினரின் பிடியில் இருக்கும் சகோதரனின் பிரிவின் வலியை உணர்த்தும் அந்த சிறுமியின் அழுகை என்னவோ செய்கிறது.
#மிக முக்கியம் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு. ஜெய்ஹிந்த்!

Tuesday, April 2, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 10!




விலைவாசிகளை அதிகரிப்பதிலும்;

பொருளாதார இடைவெளியை விரிவுப்படுத்துவதிலும்;

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குவதிலும்;

மக்களை பொருள் நெருக்கடியில் சிக்க வைத்து அவர்களை இயங்க விடாமல் செய்வதிலும்;

வளர்ச்சி என்ற மாயையை கொண்டு மனிதத்தை சிதைப்பதிலும்;

சுற்றுச்சுழலை  பாழ்படுத்துவதிலும்;

அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் ஊழல்வாதிகளாக  மாற்றுவதிலும்;

நேர்மையாக இயங்க விரும்பும் வெகு சிலரையும்  இல்லாமல் செய்வதிலும்;

தங்கள் விருப்பு, வெறுப்பு, லாப நஷ்டத்திற்காக சட்டங்களை வலைப்பதிலும்;

அநியாயமான நியாயங்களை வகுப்பதிலும்;

நீதி கேட்டு நடக்க கூடிய போராட்டங்களை சிதைப்பதிலும்;

அந்நிய சக்திகளுக்காக இந்தியாவை தாரை வார்த்து கொடுப்பதிலும்;

இந்த பெரு முதலாளிகளின் கை ஓங்கி கொண்டே இருக்கிறது.          




அதிக அளவிலான குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களை  உருவாக்குவதன் மூலம் பெருமளவு மக்களை பொருளாதார அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு விட முடியும், அதே நேரத்தில் கட்டுக்கடங்கா சக்திகளையும், அதிகாரங்களையும் குவித்து வைத்திருக்க கூடிய இந்த பெரு முதலாளிகளை அடித்து விரட்டி விட முடியும்.

பல ஆயிரம் வருடங்களாக நம் மரபணுவில் பதிந்து விட்ட அடிமை செல்களை  உடைத்தெறிந்து இதை நம்மால் சாத்தியப்படுத்தி விட முடியுமா?

முடிந்தால் சிந்தியுங்கள்!

Monday, March 4, 2013

மகிழ்ச்சியின் ரகசியம்!




வியாழக்கிழமை மாலை சுமார் ஏழு மணியிருக்கும், சைதை ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி மார்க்கெட் அருகே இருக்கும் நடை பாதை கடைகள் வழியாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.  எத்தனை முறை தங்கள் வாழ்வாதாரமான அந்த கடைகள்  அகற்றப்பட்டாலும் அத்தனை முறையும் முளைத்து விடுகின்ற நவீன இந்தியாவின் 'பினிக்ஸ் பறவைகள்' அந்த எளிய மனிதர்கள்!

இப்பொழுதெல்லாம் நடைப்பாதை கடையினர் கூவி விற்பதை யாரும் கண்டு கொள்வதே இல்லை, பெரும் தொகை செலவிட்டு செய்யப்படும் விளம்பரங்களுக்கும் பல வித இயந்திர இரைச்சல்களுக்கும் இடையே இந்த அன்றாடங்காய்ச்சிகளின் குரல் பலவீனமானதாகவே ஒலிக்கிறது! என்ன செய்ய?

எண்ண ஓட்டத்தோடு நடையின் வேகத்தையும் தீவிரப்படுத்தினேன்.

தீடிரென கேட்ட சத்தமான சிரிப்பு சத்தம் நடையின் வேகத்தை சற்று குறைத்து விட்டிருந்தது.  

'அட இங்க பாருடா என் முருங்கை கீரைக்கு எவ்வளவு வெளிச்சம்', கீரைக்கார பாட்டி தெருவோர சோடியம் லைட்டின் வெளிச்சம் அவளின் 'விற்காத முருங்கைக்கீரையின்'  மேல் பட்டு விட்டதற்கு சந்தோஷப்பட்டு கொண்டிருந்தாள்.

கேட்டு கொண்டே அவளை கடந்து விட்டேன். வீடு சேர்ந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேலும் அந்த வார்த்தைகள் மனதில் மீண்டும் மீண்டும் பிரசவித்து கொண்டிருந்தன.    

என்னிடம் இருந்து எதையோ எடுத்து சென்ற அந்த வார்த்தைகள், சற்று நேரம் கழித்து எதையோ கொடுத்து விட்டு சென்றிருந்தது! - "எளிய மனிதர்கள் தங்களின் சின்ன சின்ன மகிழ்ச்சிகளுக்கு காரணங்களை தேடி கொண்டிருப்பதில்லை, அவர்களே அதை உருவாக்கி கொள்கிறார்கள்"

அன்புடன்,

வினோத் குமார் வி எஸ்

Monday, January 14, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 9: தைத்திருநாளும், சில வரிகளும்!

முடிந்தால் சிந்தியுங்கள் - தைத்திருநாளும், சில வரிகளும்! 

மனித நாகரிகத்தின் முதல் விதை, மனித சமூகம் மற்றும் அனைத்து தொழில்களையும் தனது கருவறையில் சுமந்து, பெற்று, வளர்த்தெடுத்த தாய், விவசாயம்!

தாயின் துணை கொண்டு மனித சமூகத்தை வளர்த்தெடுக்கவும், பாதுகாக்கவும் தன்னையே அர்பணித்த "தாயின் தவப்புதல்வன்", விவசாயி! 

நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது. ஆனால் வெளியில் சொல்ல தான் வாய் கூசுகிறது. மாபெரும் விந்தை!

என் தாயிற்கும், என் பாதுகாவலனுக்கும் என் நாகரிகத்தை கொண்டு நான் அளித்த பரிசு என்ன தெரியுமா?

மரபணு மாற்ற விதைகள், ரசாயன உரங்கள், பாசன நீர் தட்டுப்பாடு, பல்லுயிர் சூழலை கெடுத்து மலடாக்க பட்ட விளை நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கும் விளை நிலங்கள், விலை பொருட்களுக்கு அடிமட்ட விலை நிர்ணயம், பசி, பட்டினி, அடைக்க முடியா கடன்கள், நகரத்தை நோக்கிய வாழ்வாதார தேடல்கள், வாழ்வாதரதிர்க்காக பிற தொழிலின் கூலிகளாக மாற்றப்படுதல்,  இறுதியாக தற்கொலைகள், இல்லை இல்லை, சமூக கொலைகள். வெட்கக்கேடு!

அதோடு நின்று விட்டோமா?

அவ்வளவு நல்லவர்களா நாம்! படிக்காதவனின் தொழில், அடித்தட்டு மக்களின் தொழில், மதிப்பில்லா தொழில்; இது தானே அவர்களை பற்றிய சமூகத்தின் பார்வை. உண்மை தான், சமூகம் நிச்சயமாகவே கோமாளிகளின் கூட்டமைப்பு தான்!

பல லட்சம் ஆண்டுகளாக நீண்ட, நெடியதொரு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறதாம் மனித சமூகம், அந்த பயணத்தின் முடிவின் காரணி என்னவாக இருக்க முடியும்?

தனி மனித மனசாட்சிகளால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், சமூகத்தின் மனசாட்சிகளுக்கு ஆணித்தரமாகவே அது தெரியும். விவசாய புறக்கணிப்பு, விவசாயிகள் அழிப்பு!

மிக கொடூர எதிரியோ, வேற்று கிரக வாசிகளோ, கொலைக்கார ஆயுதங்களோ தேவைப்படாது. மாபெரும் உணவு பஞ்சமும் , நஞ்சாகி போன உணவு பொருட்களையும் கொண்டு மனித இனமே தன்னை அழித்து கொள்ளும். வேடிக்கை!

முடிந்தால் விவசாயத்தையும், விவசாயிகளையும் அரவணைக்கவும், ஆதரிக்கவும், வளர்த்தெடுக்கவும் தொடங்குவோம். இல்லையேல் மனித சமூகத்தின் கடைசி நாட்களுக்காக நம்மை ஆயுத்தப்படுத்தி கொள்வோம்!

தைத்திருநாள் வாழ்த்துக்களை இப்பொழுதாவது சொல்லி விட தான் மனம் நினைக்கிறது, என்ன செய்ய அதை சொல்ல விடமால் மனசாட்சி தடுக்கிறது!

முடிந்தால் சிந்தியுங்கள்!

Tuesday, January 1, 2013

தனி மனித சுதந்திரம்!

தனி மனித சுதந்திரம் என்பது "தான் சமூகத்தின் ஒரு அங்கம்" என்ற பொறுப்புணர்வோடு புரிந்து கொள்ளப்பட வேண்டும்; சக மனிதர்கள், சமூகம், இயற்கை போன்றவற்றின் மீதான விளைவுகளை புறந்தள்ளி விட்டு தான்றோன்றி தனமாக செயல்படுவதற்கு பெயர் தனி மனித சுதந்திரமாக இருக்க முடியாது அதை காட்டுமிராண்டித்தனம் அல்லது சுயநலம் என்று வேண்டுமானால் அடையாள படுத்தி கொள்ளலாம்.     

Monday, December 24, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 8!

குற்றமும் தண்டனையும் 

உலகில் நடைபெறும் அனைத்து குற்றங்களும் ஒரே காரணத்திற்காகவோ, நோக்கத்திற்காகவோ செய்ய படுபவை அல்ல, இதை புரிந்து  கொள்ளவே  தயாராய் இல்லாத வரை அவற்றில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளவோ, அல்லது குற்றங்களை தடுத்து நிறுத்தவோ முடியும் என்று நினைப்பது சிறு பிள்ளைத்தனம். 

தவறுகளுக்கான தண்டனைகளை பற்றி பேசுவதில் நாம் காட்டும் ஈடுபாடு அவை நடை பெறாமல் இருக்கவும் , நடை பெரும் பட்சத்தில் நம்மை தற்காத்து கொள்ளவும்  செய்ய வேண்டியவனைவற்றை பற்றி பேசுவதில் இல்லை , பிறகொரு குற்றம் நடக்கையில் திரும்ப கொடி பிடிக்க தொடங்கி விடுகிறோம் - இந்த மன நிலையை வைத்து கொண்டு  நாம் எதை தான் சாதித்து விட முடியும்? 

குற்றங்கள் வானத்தில் இருந்து நேராக  மனித மனங்களில் டௌன்லோட் செய்ய படுவதாக கற்பனை செய்வதை சற்று மறு பரிசிலனை செய்வோம், அவை கண்டிப்பாக நோய் பிடித்த ஒரு  சமூகத்தின் மூலம் மனித மனங்களில் பரவிய தொற்று நோயாக  தான் இருக்க முடியும், மன நோய்கள் மூலம் செய்ய படும் குற்றங்களுக்கும், சமூகத்திற்கு ஒரு மிக பெரிய  பங்கு இருப்பதை எந்த மன நல மருத்துவராலும்  மறுத்து விட முடியாது.  தனி மனித ஒழுக்கம் தொடங்கி அரசியல் சாசனம் வரை பரவி இருக்கும் நோய் கிருமிகளை  மேலும் வளராமல் நிறுத்தி வைக்கவும் , ஒட்டு மொத்தமாக அழிக்கவும், மீண்டும் பாதிக்காமல்  தடுக்கவும் வேண்டியவற்றை  செய்ய வேண்டிய கட்டாயம்  மனிதம் பற்றி சிந்திக்க தயாராய் உள்ள ஒவ்வொருவருக்கும்  உள்ளது. நோயற்ற சமூகத்தில் வலி நிவாரணிகள்  வழகொழிந்து போகும் என்பது நிதர்சனம். விதைக்காமல், விளைவதை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை, தனி மனிதர்களாகவும், சமூகமாகவும் நல் விதைகளை முதலில் விதைத்து  விட்டு நல்லதொரு சமூக மாற்றத்திற்காக காத்திருக்க தொடங்குவோம்!    

தண்டனைகள் வலி நிவாரணிகள் மட்டுமே நோய்க்கான  காரணங்களையும் அவை  ஏற்படாமல் தற்காத்து கொள்வதை பற்றியும் சிறிது பேசி வைப்போம்!  

முடிந்தால் சிந்தியுங்கள்!     

Friday, November 30, 2012

அனுபவ பாடம் - 2!


இயந்தரமயமாகி  விட்ட வாழ்கை பயணத்தில் சிந்தனைக்கான சாத்தியகூறுகள் அழித்து ஒழிக்கப்பட்டு வருகின்றன. பொருளாதாரம், அறிவியல், அரசியல் போன்ற பொருள் சார்ந்த சிந்தனைகள் மனித உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று பணத்திற்காகவும், பெட்ரோலுக்காகவும் ஓடும் வாடகை வண்டி போல பொருளாதரத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் ஓடும் மனித இயந்திரங்களை உருவாக்கி வருகின்றது.

 மனிதம் பட்டு போய் விடாமல் தழைக்க பொருள் சார்ந்த சிந்தனைகளுக்கு வேக தடைகள் அவசியமாகின்றன. என் அனுபவத்தில் நீண்ட தனிமை பயணங்கள் ஒரு மிக சிறந்த வேக தடையாக செயல்படுகின்றதுசில மணி நேர பேருந்து, ரயில் பயணங்களில் சிந்தனைகள் சிறிய விதைகளாக விதைக்கப்பட்டு, துளிர் விட்டு விருட்சமாகி விடுகின்றன, அதை போன்று உருவான சிந்தனை  விருட்சங்கள் என் வாழ்கை பயணத்தை பலவாறு மாற்றி அமைத்து உள்ளது.

வாழ்கை பயணத்தை செம்மையாகவும், ருசிகரமானதாகவும் அமைத்து கொள்ள பயணங்கள் அவசியமாகின்றன. வேக தடைகள் தானாக உருவாவதற்காக காத்திருக்காமல் வாய்ப்பு கிடைக்கும் போது உருவாக்கி கொள்ளுங்கள், நீண்ட தனிமை  பயணங்களாக.

உங்கள் அனுபவம் கூறும் வேக தடைகளையும் தெரியபடுத்துங்கள்.


Wednesday, November 21, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 7



தண்டனை என்பது சட்டபூர்வமாக பழிக்கு பழி வாங்கும் படலம் மட்டுமே என புரிந்து கொள்பவர்களுக்கு கசாப்பின் தூக்கு நியாயமான ஒன்றாய் தான் இருக்க முடியும்! கசாப்பின் தூக்கு நம் பழி வாங்கும் உணர்வுகளுக்கும், அரசியல்வாதிகளின் வாக்கு வங்கிகளுக்கும் வேண்டுமானால் நியாயம் செய்யுமே  தவிர  தீவிரவதத்தையோ, வன்முறையையோ குறைக்கும் என்ற நம்பிக்கை மக்களை ஏமாளியாகவே வைத்திருக்க செய்யப்படும்  பூச்சிக்காட்டல் மட்டுமே.   

மரண தண்டனைக்கு எதிரான நிலை என்பது மனிதத்திற்கு ஆதரவான நிலை தானே தவிர மரண தண்டனை குற்றவாளிக்கு ஆதரவான நிலை இல்லை. சட்டபடி குற்றமான ஒன்றை சட்டமே செய்யும் போது குற்றமில்லை என்ற அபத்தத்தின் சிறந்த உதாரணம் மரண தண்டனை! 

மரண தண்டனைகளை ஒழிப்போம், மனிதனாக முயற்சிப்போம்.  

முடிந்தால் சிந்தியுங்கள்!