Tuesday, October 25, 2011

இனிய தீபாவளி வாழ்த்துகள் :-)




இந்த தீப ஒளி திருநாளில், உங்கள் வாழ்கை பாதையில் படிந்திருக்கும் இருள் முற்றிலுமாக தொலைந்து போகட்டும், இனி வரும் காலம் மத்தாப்பின் சிரிப்போடும், அணுகுண்டின் அதிரடியோடும், வான வேடிக்கையின் உற்சாகத்தோடும் வண்ணமயமாக அமையட்டும்.
இனிய தீபாவளி வாழ்த்துகள் :-)

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

பின் குறிப்பு: சுற்று சூழலுக்கு அதிக அளவு மாசு ஏற்படா வண்ணம், குறைந்த அளவு பட்டாசுகளை வெடித்து, நிறைவான மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும், பாதுகாப்போடும் இந்த தீபாவளியை கொண்டாடுங்கள்.

Monday, October 24, 2011

இந்தியாவின் நொட்டைகளும், நொல்லைகளும்!


உறவுகளை துச்சமாக மதித்து, அந்நிய நாட்டில் கிடைக்கும் பணத்திற்காகவும், அதன் மூலம் கிடைக்கும் வசதிகளுக்காகவும், கட்டவிழ்த்த சுதந்திரத்துக்காகவும், ராஜ அடிமைகளாக உங்கள் வாழ்கையை தொலைத்து கொண்டிருக்கும் இந்தியர்களே! உங்கள் செயலை நியாயபடுத்த, இந்திய நாட்டில் அது நொட்டை, இது நொல்லை என்று சொல்வதை தயவு செய்து இன்றோடு நிறுத்தி விடுங்கள். உங்கள் தாயார் அசிங்கமாக இருந்தால், அழகாக இருக்கும் த்ரிஷாவையும், நயந்தாராவையும் எப்படி அம்மா என்று கூப்பிட முடியாதோ, அதே போல் எங்கள் தாய் நாட்டில் எத்தனை நொட்டைகள் இருந்தாலும், எவ்வளவு நொல்லைகள் இருந்தாலும் எங்களால் அவளை விட்டு கொடுக்க முடியாது! உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்தியாவில் இருங்கள், இல்லை உங்கள் விருப்பம் போல் உலகத்தின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சென்று வாழ்கையை தொடங்குங்கள், நாங்கள் தடுக்கவில்லை, அதை விட்டு இந்தியாவை குறை சொல்வதன் மூலம் உங்களையும் ஏமாற்றி கொண்டு, வருங்கால இந்தியாவையும் எமாற்றதிர்கள். உங்கள் வாழ்க்கை தரத்தை பற்றியும், செல்வம் கொழிக்கும் உங்கள் சமூகத்தில் இருக்கும் இருண்ட பகுதியை பற்றியும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். செல்வம் என்ற வார்த்தைக்காக நீங்கள் இழந்ததையும், இழந்து கொண்டிருப்பதையும், இழக்க போவதையும் பற்றி சிந்திக்க ஆரம்பித்தால் நீங்கள் இன்னும் வாழ தொடங்கவே இல்லை என்பது புரியும்!

முடிந்தால் சிந்தியுங்கள்!

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

Saturday, October 15, 2011

ப்ரீதிக்கு நான் காரண்டீ!

ப்ரீதிக்கு நான் காரண்டீ என்பது போல மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர முயற்சிக்கிறார் நம் பிரதமர்! அலையாத்தி காடுகளை வளர்ப்பதன் மூலம் சுனாமியின் பாதிப்பை குறைக்க முடியும் என்று அறிவியல் மேதைகள் படித்து படித்து சொல்லியும், இன்று வரை எந்த இந்திய கடற்கரையிலும் அலையாத்தி காடுகளை வளர்க்க தீவிர முயற்சி எடுத்ததாக தெரியவில்லை, இவர் நம் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர முயற்சிப்பது பூனையின் கண்ணை மூடி விட்டு உலகமே இருண்டு விட்டதாக அதை நம்ப வைக்கும் முயற்சி தவிர வேறு இல்லை. பதிமூன்றாயிரம் கோடிக்காக ஆறு கோடி மக்களின் உயிரோடு விளையாடுவது இரண்டாயிரம் ரூபாய் இழப்புக்காக ஒருவனின் உயிரை பறிக்க முயற்சிபதற்கு சமம். பொது மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்து, கார்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக தமிழகத்தை இன்னொரு போபாலாக்க முயற்சிப்பதை வன்மையாக எதிர்க்கிறோம்.

அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்

அரசாங்கத்தின் பூச்சாண்டி!

 
 
நிலக்கரி பற்றாகுறை, காற்றலை உற்பத்தி குறைவு என மின் பற்றாகுறை பிரச்சனையை மிகைபடுத்தி, அணு மின் நிலைய பிரச்சனையை திசை திருப்ப முயலும் மத்திய அரசு, நாளை உணவு பற்றாகுறை என்று மனிதர்களை மனிதர்களே கொன்று திண்ண கூட சட்டம் இயற்றினாலும் அச்சிரியபடுவதர்கில்லை! நம் இந்தியாவின் மக்கள் சக்தியை பயன்படுத்தி பல ஆயிரம் கோடிகளை லாபமாக தங்கள் நாட்டுக்கு எடுத்து செல்லும் கார்பரேட் நிறுவனங்கள், தங்கள் மின் தேவையை அரசாங்கத்தை நம்பியில்லாமல் சுயமாக பூர்த்தி செய்ய தீர்மானம் இயற்றபட வேண்டும், இது தற்போது எழுந்துள்ள அணுமின் பிரச்சனைக்கு தீர்வாக மட்டும் இல்லாமல், நட்டத்தில் இயங்கி வரும் பல தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஒரு ஊக்கமாகவும், புதிதாக பல தொழிலதிபர்கள் மின் உற்பத்தியில் கால் பதிக்க ஒரு உந்துதலாகவும், உலக அளவில் மின் உற்பத்தியில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க ஒரு வாய்பாகவும் இருக்கும். பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வை யோசிக்காமல், குறுக்கு வழியில் காரியத்தை சாதிக்க நினைக்கும் அரசின் இந்த மெத்தன போக்கு என்று தான் மாறுமோ! 
அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்

Friday, October 7, 2011

அணு உலை பாதுகாப்பானது தான், ஆனால் இங்கு அல்ல!




அணுமின் நிலைய விவகாரத்தில் பிரதமரின் முட்டாள்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஜப்பானில் நடந்த பேரழிவுக்கு பின்னர் பல உலக நாடுகள் இயங்கி கொண்டிருக்கும் அணுமின் நிலையங்களையே மறுபரிசிலனை செய்ய முற்படும் போது யாருடைய நலனுக்காக அவசர அவசரமாக புதிதாக ஒரு அணுமின் நிலையத்தை இயக்க துடிக்கிறார் நம் பிரதமர்? நாட்டின் பெரும்பகுதி மின்சாரத்தை அயல் நாட்டு தொழிற்சாலைகள் பயன்படுத்தி கொண்டிருக்கையில், குடிமக்களின் நலன் கருதி மின் உற்பத்தியை அதிகபடுத்த தீவிரம் காட்டுவது போல நம் பிரதமர் நடந்து கொள்வது கேலிகூத்து! விதண்டாவாதம் பேசுவதில் நம் தமிழர்களுக்கு நிகர் தமிழர்களே , உயர்திரு சோ சொல்கிறார், அணுமின் நிலையம் ஆரம்பித்து பல வருடங்களாக போராடாத மக்கள், அது செயல்பட தயாராகும் நேரத்தில் யாரோ சிலரின் தூண்டுதலால் போராடுகிறார்களாம்! விட்டால் ஜப்பான் தனக்கு அணுமின் நிலையங்களே தேவை இல்லை என்ற முடிவை கூட தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் தூண்டுதலால் தான் என்பார்கள் போல! எப்படியெல்லாம் அரசியல் செய்ய வேண்டும் என்று இவர்களிடம் தான் கற்று கொள்ள வேண்டும். அணுமின் நிலைய கட்டுமான வேலை ஆரம்பித்து எத்தனை தடவை தற்பொழுது ஜப்பானில் ஏற்பட்ட அழிவை போல ஏற்பட்டுள்ளது? ஹிரோஷிமா நாகசாகி நிகழ்வுக்கு பிறகு தான் அணு ஆயுத தயாரிப்பு, உபயோகம் மற்றும் கையிருப்பை பற்றி உலக நாடுகள் தீவிரமாக சிந்தித்து, கட்டுபாடுகளை விதிக்க ஆரம்பித்தது என்று இந்த அறிவு ஜீவிகளுக்கு தெரியாதா? ஒரு வேடிக்கையான ஆங்கில பழமொழி உண்டு, இது வரை யாருமே செய்திராத பல ஆயிரம் தவறுகள் இருக்கும் போது, ஏற்கனவே யாரோ செய்த தவறை மறுபடி ஏன் செய்யவேண்டும்? அணுமின் நிலையங்களால் பேரழிவு ஏற்படும் என்பதை கண்கூடாக கண்ட பின்பும் அவசர அவசரமாக முடிவெடுக்கும் இந்த தொலை நோக்கு சிந்தனையாளர்களை என்னவென்று சொல்வது?
நம் தொழில் நுட்பத்தை நம்புங்கள், நம் அறிவியல் வல்லுனர்களை நம்புங்கள் என்று கூச்சல் போடுபவர்கள் கவனத்திற்கு, தொழில் நுட்பம் முழுவதும் நம்முடையது அல்ல, அறிவியல் வல்லுனர்களை நாங்கள் முழுவதும் நம்புகிறோம் ஆனால் அதை விட அதிகமாக அணுவின் தீவிரத்தையும், இயற்கையின் சக்தியையும், மனிதர்களின் வக்கிரத்தையும் கண்டு நடுங்குகிறோம். இவர்களை தூக்கி சாப்பிடும் சில மகான்கள் உள்ளனர், நடந்து போனாலும் மரணம் வரும், சைக்கிளில் சென்றாலும் மரணம் வரும், பஸ்சில் சென்றாலும் மரணம் வரும், எரோப்ளேனில் சென்றாலும் மரணம் வரும், ராக்கெட்டில் சென்றாலும் மரணம் வரும் என்று என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறி கொட்டுவார்கள், சாவுக்கும், அழிவுக்குமே வித்தியாசம் தெரியாத இவர்களை எல்லாம் எந்த கூட்டத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை! சில நூறு பேர் சாவதற்கும், சில நூறு கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு ஈ, கொசு கூட இல்லாமல் அழிந்து போவதும் எப்படி ஒன்றாகும்?அணு கதிர்களால் நீங்களும் நானும் மட்டுமா சாக போகிறோம்? நம் தலைமுறை மட்டுமா பாதிக்க பட போகிறது?
நாங்கள் அணுமின் நிலையங்களை மட்டும் எதிர்க்கவில்லை, அணு ஆயுதங்களை மட்டும் எதிர்க்கவில்லை, மானுடத்தை சுக்கு நூறாக சிதைக்கும் வல்லமை பெற்ற அணுசக்தியை மொத்தமாக எதிர்க்கிறோம், அணு உலகின் தலை சிறந்த ஆற்றல் என்பதில் மாற்று கருத்து இல்லை, அணுமின் நிலையங்களின் எண்ணிகையை விட அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகம் என்பது பள்ளி சிறுவர்களுக்கு கூட தெரிந்த நிதர்சனமான உண்மை. இயற்கை அழிவை கண்டிராத கோளில், வன்முறையை அறியாத உலகத்தில், எதிரிகள் இல்லாத நாட்டில், மனித தவறுகள் நிகழாத சமூகத்தில் அணு உலை பாதுகாப்பானது தான், ஆனால் இங்கு அல்ல!


அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்