Tuesday, November 5, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 11!

இன்றைய சுழலில் நாகரிகம் என நம் சமூகம் சிந்திப்பது அனைத்துமே எதொ ஒரு விதத்தில் கன்சுயுமரிச சிந்தனைகளை நமக்குள் விதைப்பவைகளாக தான் இருக்கின்றன. 

மனிதர்களை ஆழ்ந்து நேசிக்க கூடிய மனநிலை சுருங்கி, தேவையின் அடிப்படையிலான நட்பு, உறவு, காதல் என்ற கன்சுயுமரிச மனநிலை சமூகத்தின் நிச்சயத்தன்மையை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றன. பெருகி வரும் முதியோர் இல்லங்களும், ஆதரவற்றோர் காப்பகங்களும், விவாகரத்து வழக்குகளும், ப்ரேக் அப்களும், துரோகங்களும், ரோட்டோர பிச்சைக்காரர்களும், அநாதை பிணங்களும், வன்ப்புணர்வுகளும் இதைத்தான் நமக்கு சொல்லி கொண்டிருக்கின்றன.

கார்ப்பரேட்களும், மீடியாக்களும் சேர்ந்து கட்டமைக்கும் நாகரிகங்களை தூக்கி சாக்கடையில் வீசி விட்டு, நாகரிகமான மனிதர்களாக சக மனிதர்களை நேசிப்போம்.

முடிந்தால் சிந்தியுங்கள்.

Wednesday, June 12, 2013

இயற்கையை போற்றி வளர்த்திடுவோம்!

காகித கப்பில் டீ குடித்து
பிளாஸ்டிக் பாட்டிலில் நீர் அருந்தி
தெர்மாகோல் ப்ளேட்டில் சோறுண்டு
கேரி பேக்கில் பொருள் வாங்கி
ஏ சி ரூமில் படுத்துறங்கி
சாயப்பூ உடையணிந்து
கார்பன் மோனக்சைட்டில் பயணித்து
சுவரெல்லாம் போஸ்டர் ஒட்டி
செவிக்கிழிய பேசிடுவோம் - இயற்கையை
போற்றி வளர்த்திடுவோம்!

தூப்புக்காரி !

வார்த்தைகளால் ஜாலம் செய்யாமல்,போலியான விறு விறுப்புகளுக்காக மெனக்கெடாமல்; வலிகளையும், ரணங்களையும் கொண்டு மெய் சிலிர்க்க
வைத்து விட்டார் மலர்வதி. நெஞ்சில் கணத்தையும், விழிகளில் ஈரத்தையும் சர்வ சாதாரணமாக ஏற்படுத்தக்கூடியவள் இந்த தூப்புக்காரி; இறுதி
பக்கங்களில் வாழைப்பழத்தில் உசியை இறக்குவது போல் இலகுவாக உங்கள் உயிரில் வலியை இறக்கி விடுவாள்.

இரா. நடராசனின் ஆயிஷாவிற்கு பிறகு என்னை நிலை குலைய வைத்த மலர்வதியின் இந்த தூப்புக்காரி கேள்விகள் ஏதும் இன்றி கொண்டாடப்பட வேண்டியவள் தான்..

விதையிலுருந்து மரம்!

பாபநாசத்தில் பூவுலகின் நண்பர்கள் நடத்திய விதையிலுருந்து மரம் பயிற்சி பட்டறை இயற்கையின் மீதான காதலை மேலும் தீவிரப்படுத்தி விட்டது.

சென்னை திரும்பிய நிமிடத்திலிருந்தே அடுத்து எப்படா இப்படி இயற்க்கையோடு கொஞ்சி, குலாவி காதலை வளர்ப்பது என ஏக்கமாக இருக்கிறது; பூகம்பமே வந்தாலும் எட்டு மணி வரை அசையாத ஒருவன் (வேற யாரு நான் தான்) இப்படி நாலு மணிக்கே எழுந்து உக்காந்து விட்டத்த பார்த்து  யோசிச்சா என்ன அர்த்தம் ?! - பியார் முத்தி போச்சு.

#உண்மை காதலுக்கு உதவ காத்திருப்போர் கவனத்திற்கு!

பின் குறிப்பு: எனக்கு தெரிஞ்சு இன்னும் இயற்க்கைன்னு எல்லாம் எந்த பொண்ணுக்கும் பேர் வைக்கல - எதையாவது கெளப்பி விட்டுடாதிங்க பாஸ்.

எல்லாம் வல்ல இயற்கை!

ஒரு நல்லவர் மூன்று மாதங்களில் சென்னையில் குப்பையையே பார்க்க முடியாது என அறிவித்தார் - ஒரு வருடத்திற்கு முன்பு! இந்த உலக சுற்று சுழல்
தினத்திலாவது அவருக்கு நல்ல புத்தியை கொடுக்குமாறு எல்லாம் வல்ல இயற்கையை வேண்டி கொள்கிறேன்..

எது பார்ப்பனீயம்!

பாக்கியம் ராமசாமி எழுதிய "அப்புசாமியும் ஹிப்னாடிச பூனையும்" படித்து கொண்டு இருந்தேன், நல்ல நகைச்சுவையோடும், சுவாரஸ்யமாகவும்,
விறுவிறுப்பாகவும் அமைந்திருந்த கதைக்களம் புத்தகத்தை கீழே வைக்கவே அனுமதிக்கவில்லை; திடீரென கதையின் கடைசி பக்கங்களில் தேச விரோத
சக்திகள், புலிகள், பிரபாகரன் என சம்பந்தமே இல்லாமல் கதை கரைபுரண்டி ஓட ஆரம்பித்தது. இதற்கு பெயர் தான் பார்ப்பனீயம் போல என நொந்து
கொண்டேன்.

ஆதார் அட்டையும்; கழண்ட டவுசரும்!

செத்தாலும் ஆதார் அட்டை வாங்க கூடாது என தீர்க்கமாய் இருந்தவனை, பிறந்த நாள் என்றும் பாராமல் ஆதார்க்கு போட்டோ எடுத்து வந்தால் தான்
சோறு என மிரட்டியதால் வேறு வழி இன்றி அவசர அவசரமாய் குளித்து பொடி நடையாக நடந்து மையத்தை அடைந்தேன், சரி சட்டு புட்டுன்னு
முடிச்சிட்டு கிளம்பிடலாம்னு பார்த்தா ஒரு ஐம்பது, அறுபது பேர் எனக்கு முன்னாடியே துண்ட விரிச்சி உக்காந்திருக்காய்ங்க, அதிலும் ஒரு சிலர்

என்னவோ ஷங்கர் படத்துல நடிக்க சான்ஸ் கேட்டு வந்தவய்ங்க மாதிரி புல் மேக்கப்போட ஆஜர் ஆயிருந்தாங்க. நிலைமையை நொந்து கொண்டே ஒரு
கியூவில் போய் நின்றேன்.

போன வாரம் செம கூட்டம்ல, இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்ல. ஒரு அக்கா உற்சாகத்துடன் சொல்லி கொண்டிருந்தாள்.

இந்த டாமி எப்பவுமே இப்படி தான் கூடவே வந்து தொல்ல பண்ணும். ஏய் ஓடு.. தன் செல்ல பிராணியை துரத்தி கொண்டிருந்தாள் இன்னொரு அக்கா.

பையன் ஊரிலுர்ந்து இப்ப தான் வந்தான், முகம் கழுவ போயிருக்கான். இதோ வந்துடுவான். அங்கு இருந்த ஒரு ஆபிசரிடம் சொல்லி கொண்டிருந்தாள்
பாட்டி ஒருத்தி.

மொதல லெப்ட் கைய வைக்கணும் அப்பறம் ரைட் கைய வைக்கணும் அப்பறம் பெரு விரல் ரெண்டையும் வைக்கணும் அப்பறம் அந்த பைனாகுலர்ல

பாக்கணும். அவ்வளவுதான். ஒரு வயதான பாட்டிக்கு விளக்கி கொண்டிருந்தார் சீனியர் ஒருவர் (ஆமாங்க நமக்கு முன்னாடியே எடுத்துட்டார்ல அப்ப சீனியர் தானே)

தம்பி தலைய நேரா வச்சு இந்த கேமராவ பாரு. முகத்த மேல தூக்கு, கண்ண மூடாத. ஒழுங்க ஒக்காரு. நீண்ட நேரமாக ஒரு சுட்டி சிறுவனிடம்
மன்றாடி கொண்டிருந்தார் ஒரு ஆபீசர்.

யோவ் எனக்கு பின்ன தானே வந்த நீ பாட்டுக்கு முன்ன போற.
அண்ணே அவரு பேஷெண்ட்.
அதுக்கு நான் என்ன பண்றது போய் கியூல வாங்க. எனக்கும் தான் உடம்பு சரி இல்ல.
போங்க போய் கியூல வாங்க.. வந்துட்டானுங்க @#$%^&*():"(பின்னாடி இருந்த அனைவரும் கோரஸாக)
வெற்றி களிப்புடன் ஒரு நடுத்தர வாலிபர்.

அந்த கியு எவ்வளவு வேகமா நகருது இங்க பாருங்க. வழக்கமான பொலம்பலுடன் பக்கத்து ஆசாமி.

டேய் தம்பி மண்ணில விளையாடுவையா பாரு கை ரேகை சரியாவே வர மாட்டேங்குது, ஒரு ரெண்டாவது படிக்கும் சிறுவனிடம் ஆபீசர்.

ஒரு வழியாக பேராக்கு பார்த்து கொண்டே நம் முறையும் வந்தது. அப்படியே போய் பத்து விரல்களின் ரேகைகளையும் கொடுத்து கண் கருவிழியின் ரேகைகளையும் கொடுத்து, க்ளோஸ் அப்பில் (நல்ல வேலை ஆபீசர் பயப்படவில்லை) ஒரு போஸ் கொடுத்து, பெயரில் உள்ள எழுத்து பிழைகளை சரி செய்து ரேஷன் அட்டையை வாங்கி கொண்டு கிளம்பினேன்.

ஆதார் அட்டை என்ற பெயரில் ஒரு மனிதனின் தனித்துவமான பத்து விரல் ரேகைகளையும், கண்ணின் கருவிழி ரேகையையும் பதிவு செய்து தன்

குடிமக்கள் மீது ஒரு கட்டற்ற அதிகாரத்தை நிறுவ முயலும் இந்த திட்டம் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ஒரு மனித உரிமை மீறல் தான்.

பின்னொரு காலத்தில் குடிமக்களின் மரபணு. ஸ்டெம் செல்களை கூட தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த அரசு முயலும் அப்பொழுதும் கூட இந்த
எளிய மக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இதே ஈடுபாட்டுடன் அதை வாரி வழங்குவார்கள்.

காரணம் கேள்வி கேட்பது இங்கு தேச துரோகம்.

Friday, April 5, 2013

இயற்கையின் எதிர்வினை!



ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, கடுமையான பாறைகளை கொண்டு பஞ்சபூதங்களை ஒருங்கிணைத்து, இயற்கை கட்டமைத்த பிரம்மாண்ட மலைகள் இன்று சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை கொண்டும், திறன் மிகுந்த ராட்சத இயந்திரங்களை கொண்டும், அன்றாடங்காய்ச்சிகளாக வாழக்கூடிய மனிதர்களின் சக்தி கொண்டும், சிறிது சிறிதாக தரைமட்டமாக்கபடுதவதை காணும் பொழுதெல்லாம் தொழில்நுட்ப்ப வளர்ச்சியை நினைத்தோ, மனித உழைப்பின் சக்தியை நினைத்தோ புளங்காகிதம் அடைய முடியவில்லை, மாறாக மனிதனின் சுயநலத்தேடல்களுக்காக இயற்கைக்கு எதிராக அவன் ஆற்றி கொண்டிருக்கும் வினைகளுக்கு இயற்கை ஆற்ற இருக்கும் எதிர்வினைகளை நோக்கி கவலைப்பட வேண்டியதாயுள்ளது.

மகிழ்ச்சி!

மகிழ்ச்சி மிகச்சிறந்த அனுபவமாக இருந்தாலும் கூட அதனூடே சிறந்த மனிதர்கள் வடிவமைக்கப்படுவதில்லை, மாறாக கடுமையான வலியை ஏற்படுத்த கூடிய அனுபவங்களும், நெருக்கடி சந்தர்ப்பங்களும் மிகச்சிறந்த மனிதர்களையும், ஆளுமைகளையும் வார்த்தெடுத்து விடுகிறது.

Wednesday, April 3, 2013

ஏர்டெல்!

தற்போது தான் ஏர்டெல் நிர்வாகி பேசினார்.. 
எதுக்காக ஏர்டெல்ல இருந்து மாற விரும்புரிங்கனு தெரிஞ்சக்கலாமா?
இலங்கை போரில ஏர்டெல் செய்த துரோகத்திற்காக ஏர்டெல்ல புறக்கணிக்கறதுனு முடிவு பண்ணி இருக்கோம் அதான்.சிரித்து கொண்டே தொடர்தேன் நீங்களும் இந்த வேலைய விட்டுட்டு வேற நல்ல வேலையா பாருங்க.
அவசர அவசரமாக ஏர்டெல்லை அழைத்ததற்கு நன்றின்னு வச்சிட்டாரு 
#யோவ் நீ தான்யா போன் பண்ண :-)!

கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே!

நம்ம கனவு வியாபாரியும், நாசாவும் கல்பாக்கம் மக்களுக்கு எதாவது 10 அம்ச திட்டம் வச்சி இருப்பாங்களே கொஞ்சம் எடுத்து விடுறது. 

#கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே.

பாரதியின் பிள்ளைகளாய் எழுவோம்!

தனித்தமிழ் ஈழத்திர்கான பொது வாக்கெடுப்பு, இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை, ஈழ மக்களின் மறுவாழ்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களின் போராட்டம் போன்றதொரு போராட்டம் நம் கல்லூரி மாணவர்களாலும் முன்னெடுக்க பட வேண்டும். பொதுவாகவே பெரிய கல்லூரிகளின் படிக்க கூடிய மாணவர்கள் சமூக பிரச்சனைகளில் இருந்து தங்களை தூரப்படுத்தி கொள்ளும் போக்கு இனி மேலும் நமக்கு வேண்டாம். சக மாணவர்களின் போராட்டங்களில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு அவர்களுடன் கூடி போராட நாம் நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். தொழில் நுட்ப ரீதியாக நம் கை மேலோங்கியிருக்க கூடிய நிலையில் நாம் கையிலெடுக்க கூடிய சமூக பிரச்சனைகள் தீர்வுகளை நோக்கி வேகமாக பயணிக்க கூடும். பொருள் சார்ந்த சிந்தனைகள் மனிதர்களான நம் உணர்வுகளை மழுங்கடித்து விடாது என்பதை நிரூபிப்போம். மிக பெரியதொரு சமூக எழுச்சிக்காக உங்கள் 
சிந்தனைகளையும் உணர்வுகளையும் கூர்மைப்படுதுங்கள். 

வெடிப்புற பேசுவோம், வீரியம் பெருக்குவோம், வையத்தலைமை கொள்வோம், பாரதியின் பிள்ளைகளாய் எழுவோம். 

#ஈழம் என்றல்ல அனைத்து சமூக பிரச்சனைகளிலும், சக மனிதனாய் எழுவோம். சமூக மாற்றத்தை துரிதப்படுத்துவோம். அரசியலை மாற்றியமைப்போம்.

மனிதனாக முழுமை அடைவது!

பல்வேறு சந்தர்பங்களில் ஏற்படுகின்ற மனத்தாக்கங்களை திறந்த மனதோடு தன்னுள் பயணிக்க அனுமதித்து, அவை ஏற்படுத்த கூடிய மெல்லிய மாற்றங்களை தக்க வைத்து கொள்பவனே மனிதனாக முழுமை அடைகிறான்.

உண்மையான மனிதன்!

உண்மையான ஹிந்து, உண்மையான முஸ்லிம், உண்மையான கிறிஸ்துவன் என சிதறி கிடக்கும் மதவாத கூட்டத்திற்கு நடுவே உண்மையான மனிதர்களின் கடைசி தடயங்கள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு வருகின்றது. 
#எந்த ஒரு மனிதனல்லாத உண்மையான மதவாதியையும் கடுமையாக எதிர்க்கிறேன்

"நான் உங்களை நேசிக்கிறேன்"

நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களோடு அதிக நேரம் செலவிடவும், கல்லூரி நாட்களை பற்றி அசை போடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மனதில் நினைத்த உடனே நினைவுகள் மூலம் கடந்து வந்த அனைத்தையும் அருகில் கொண்டு வந்து விடுகிற கலையை கடந்த சில வருடங்களும், கடந்து வந்த சில மனிதர்களும் எனக்கு சொல்லி கொடுத்து விட்டார்கள். 

இயற்கை மகிழ்ச்சிக்கான விதைகளை என்னிடத்தில் சற்று அதிகமாகவே புதைத்து விட்டது போல, எத்தனை நண்பர்கள், சொந்தங்கள்! மனத்தொய்வுகளுக்கு நடுவே இவர்கள் அன்பை கொண்டு செய்யும் மோடி மஸ்தான் வித்தை இருக்கிறதே.. அங்கொன்றும் இங்கொன்றுமாய் இன்ப துளிர்களும், தொய்வுகளும் மாறி மாறி வருவது கூட ரோலர் கோஸ்டர் பயணத்தை போன்றதொரு மயிர்கூச்சரியும் அனுபவமாக தான் இருக்கிறது.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பின் வழியே என்னை உயிர்ப்போடு வைத்து இருக்கும் உள்ளங்களுக்கெல்லாம் சொல்லி கொள்ள விரும்புவது -

"நான் உங்களை நேசிக்கிறேன்"

#எசஸ்க்யுஸ் மீ ஜென்டில்மென் - காதலர் தின ஜுரத்திற்கு நடுவே இப்படியொரு பதிவை போட்டதற்கு :-)!

கொள்ளையடிக்கப்பட்டவை!



வீணடிக்கப்படும் ஒவ்வொரு பருக்கை உணவும் பசியோடு இருக்கும் ஒரு உயிரின் 'எதோ ஒரு செல்லின்' வாழ்நாளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை!

டவுன் பஸ் ஞானி!

வாயை மூட கற்று கொண்டு விட்டால் கவனிக்க தொடங்கி விடலாம்;
வாயோடு கண்களையும் மூட பழகி விட்டால் சிந்திக்க பழகி விடலாம்;
வாய் மற்றும் கண்ணோடு காதையும் சேர்த்து மூட முடிந்து விட்டால் ஞானி ஆகி விடலாம்! 
#டவுன் பஸ்ஸில் சீட் கிடைத்த சந்தோஷத்தில் சிந்தித்தது :-)

சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை!

தன்னெழுச்சியாக பரவி வரும் மாணவர் போராட்டங்களை பார்க்கும் பொழுது இறந்து போன நம்பிக்கைகள் துளிர்த்தெழ ஆரம்பித்துள்ளன. என் தலைமுறையை சார்ந்த சக வயது காரர்ககள் மேல் இருந்த கவலைகள், கோபங்கள், வருத்தங்கள் இந்த மாணவர்களின் எழுச்சியின் முன் அர்த்தம்மற்றதாய் ஆகி விட்டன. சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை வென்று விடுவோம் என்பதை தவிர.

உணர்வுகளின் எழுச்சி!

பொய் பிரச்சாரங்களும், போலி குற்றச்சாட்டுகளும் உணர்வுகளை எழுச்சி பெற செய்யுமே தவிர வீழ்த்தி விடாது. 

#கூடங்குளம்!

போதும் துருப்பு சீட்டுகள்!

பல லட்சம் உயிர்களின் சாம்பலை பார்த்தும் மௌனத்தை கலைக்கவில்லை இந்த உலகம், இறந்து சாம்பலானது போதும் நின்று போராடி நியாயம் கேட்க வேண்டிய நேரம் இது. நம் கையில் 2 லட்சம் உயிர்கள் துருப்பு சீட்டுகளாக இருக்கிறது இதற்கு மேலும் ஒரு துருப்பு சீட்டு வேண்டாம். இனிமேலும் ஒரு உயிரை நாம் இழந்து விட கூடாது.

ஜெய்ஹிந்த்!

இலங்கை கடற்படையினரின் பிடியில் இருக்கும் சகோதரனின் பிரிவின் வலியை உணர்த்தும் அந்த சிறுமியின் அழுகை என்னவோ செய்கிறது.
#மிக முக்கியம் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு. ஜெய்ஹிந்த்!

மனநிலைக்கு பதில் சொல்லுதல் !

ஒருவரின் மனநிலைக்கு பதில் சொல்வதென்பது நீரில் விழுந்த தேளை காப்பாற்றிய யோகியின் கதை தான். 
#நீதி: நீங்கள் யோகியாக இருந்தால் மட்டும் மனநிலைக்கு பதில் சொல்லுங்கள்.

Tuesday, April 2, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 10!




விலைவாசிகளை அதிகரிப்பதிலும்;

பொருளாதார இடைவெளியை விரிவுப்படுத்துவதிலும்;

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குவதிலும்;

மக்களை பொருள் நெருக்கடியில் சிக்க வைத்து அவர்களை இயங்க விடாமல் செய்வதிலும்;

வளர்ச்சி என்ற மாயையை கொண்டு மனிதத்தை சிதைப்பதிலும்;

சுற்றுச்சுழலை  பாழ்படுத்துவதிலும்;

அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் ஊழல்வாதிகளாக  மாற்றுவதிலும்;

நேர்மையாக இயங்க விரும்பும் வெகு சிலரையும்  இல்லாமல் செய்வதிலும்;

தங்கள் விருப்பு, வெறுப்பு, லாப நஷ்டத்திற்காக சட்டங்களை வலைப்பதிலும்;

அநியாயமான நியாயங்களை வகுப்பதிலும்;

நீதி கேட்டு நடக்க கூடிய போராட்டங்களை சிதைப்பதிலும்;

அந்நிய சக்திகளுக்காக இந்தியாவை தாரை வார்த்து கொடுப்பதிலும்;

இந்த பெரு முதலாளிகளின் கை ஓங்கி கொண்டே இருக்கிறது.          




அதிக அளவிலான குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களை  உருவாக்குவதன் மூலம் பெருமளவு மக்களை பொருளாதார அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு விட முடியும், அதே நேரத்தில் கட்டுக்கடங்கா சக்திகளையும், அதிகாரங்களையும் குவித்து வைத்திருக்க கூடிய இந்த பெரு முதலாளிகளை அடித்து விரட்டி விட முடியும்.

பல ஆயிரம் வருடங்களாக நம் மரபணுவில் பதிந்து விட்ட அடிமை செல்களை  உடைத்தெறிந்து இதை நம்மால் சாத்தியப்படுத்தி விட முடியுமா?

முடிந்தால் சிந்தியுங்கள்!

Monday, March 4, 2013

மகிழ்ச்சியின் ரகசியம்!




வியாழக்கிழமை மாலை சுமார் ஏழு மணியிருக்கும், சைதை ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி மார்க்கெட் அருகே இருக்கும் நடை பாதை கடைகள் வழியாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.  எத்தனை முறை தங்கள் வாழ்வாதாரமான அந்த கடைகள்  அகற்றப்பட்டாலும் அத்தனை முறையும் முளைத்து விடுகின்ற நவீன இந்தியாவின் 'பினிக்ஸ் பறவைகள்' அந்த எளிய மனிதர்கள்!

இப்பொழுதெல்லாம் நடைப்பாதை கடையினர் கூவி விற்பதை யாரும் கண்டு கொள்வதே இல்லை, பெரும் தொகை செலவிட்டு செய்யப்படும் விளம்பரங்களுக்கும் பல வித இயந்திர இரைச்சல்களுக்கும் இடையே இந்த அன்றாடங்காய்ச்சிகளின் குரல் பலவீனமானதாகவே ஒலிக்கிறது! என்ன செய்ய?

எண்ண ஓட்டத்தோடு நடையின் வேகத்தையும் தீவிரப்படுத்தினேன்.

தீடிரென கேட்ட சத்தமான சிரிப்பு சத்தம் நடையின் வேகத்தை சற்று குறைத்து விட்டிருந்தது.  

'அட இங்க பாருடா என் முருங்கை கீரைக்கு எவ்வளவு வெளிச்சம்', கீரைக்கார பாட்டி தெருவோர சோடியம் லைட்டின் வெளிச்சம் அவளின் 'விற்காத முருங்கைக்கீரையின்'  மேல் பட்டு விட்டதற்கு சந்தோஷப்பட்டு கொண்டிருந்தாள்.

கேட்டு கொண்டே அவளை கடந்து விட்டேன். வீடு சேர்ந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேலும் அந்த வார்த்தைகள் மனதில் மீண்டும் மீண்டும் பிரசவித்து கொண்டிருந்தன.    

என்னிடம் இருந்து எதையோ எடுத்து சென்ற அந்த வார்த்தைகள், சற்று நேரம் கழித்து எதையோ கொடுத்து விட்டு சென்றிருந்தது! - "எளிய மனிதர்கள் தங்களின் சின்ன சின்ன மகிழ்ச்சிகளுக்கு காரணங்களை தேடி கொண்டிருப்பதில்லை, அவர்களே அதை உருவாக்கி கொள்கிறார்கள்"

அன்புடன்,

வினோத் குமார் வி எஸ்

Friday, January 25, 2013

நான் வாசிக்கும் புத்தகங்கள் : 2013 - 1!




இந்த வருடம் முதல் நான் படிக்கும் புத்தகங்களை நண்பர்களுடன் பகிரலாம் என முடிவெடுத்துள்ளேன். இந்த சிறு முயற்சி நண்பர்களுக்கு புத்தகங்களை பற்றிய ஒரு அறிமுகமாகவும், வாசிப்பு பழக்கத்தை வளர்த்து கொள்ளவும்  உதவும் என நம்புகிறேன். இந்த வருடத்தில் குறைந்த பட்சம் ஒரு ஐம்பது புத்தகங்களையாவது படித்த விட வேண்டும் என முடிவெடுத்து உள்ளேன், பார்க்கலாம்!    
 
சமீபத்தில் மறைந்த டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் எண்ணங்கள் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து உள்ளேன், மிக சிறிய புத்தகம். நான் சந்தித்த பல சுயமுன்னேற்ற பயிற்சியாளர்கள் தங்களை டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் சீடன் என பெருமையாக அறிமுகப்படுத்தி கொள்வதை எண்ணி வியந்திருக்கிறேன்.  

புத்தகத்தின் பெயர் : எண்ணங்கள்
ஆசிரியர் பெயர்:  டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
பதிப்பாளர்: கங்கை புத்தக நிலையம்
விலை: 35/-  
பக்கங்கள்: 167

முடிந்தால் நீங்களும் வாசிக்க தொடங்கி விடுங்கள்.

அடுத்து படிக்க இருப்பது : 
அறிந்ததினின்றும் விடுதுலை, ஜே. கிருஷ்ணமூர்த்தி. 

விரைவில் சந்திப்போம்.  

Monday, January 14, 2013

முடிந்தால் சிந்தியுங்கள் - 9: தைத்திருநாளும், சில வரிகளும்!

முடிந்தால் சிந்தியுங்கள் - தைத்திருநாளும், சில வரிகளும்! 

மனித நாகரிகத்தின் முதல் விதை, மனித சமூகம் மற்றும் அனைத்து தொழில்களையும் தனது கருவறையில் சுமந்து, பெற்று, வளர்த்தெடுத்த தாய், விவசாயம்!

தாயின் துணை கொண்டு மனித சமூகத்தை வளர்த்தெடுக்கவும், பாதுகாக்கவும் தன்னையே அர்பணித்த "தாயின் தவப்புதல்வன்", விவசாயி! 

நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது. ஆனால் வெளியில் சொல்ல தான் வாய் கூசுகிறது. மாபெரும் விந்தை!

என் தாயிற்கும், என் பாதுகாவலனுக்கும் என் நாகரிகத்தை கொண்டு நான் அளித்த பரிசு என்ன தெரியுமா?

மரபணு மாற்ற விதைகள், ரசாயன உரங்கள், பாசன நீர் தட்டுப்பாடு, பல்லுயிர் சூழலை கெடுத்து மலடாக்க பட்ட விளை நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கும் விளை நிலங்கள், விலை பொருட்களுக்கு அடிமட்ட விலை நிர்ணயம், பசி, பட்டினி, அடைக்க முடியா கடன்கள், நகரத்தை நோக்கிய வாழ்வாதார தேடல்கள், வாழ்வாதரதிர்க்காக பிற தொழிலின் கூலிகளாக மாற்றப்படுதல்,  இறுதியாக தற்கொலைகள், இல்லை இல்லை, சமூக கொலைகள். வெட்கக்கேடு!

அதோடு நின்று விட்டோமா?

அவ்வளவு நல்லவர்களா நாம்! படிக்காதவனின் தொழில், அடித்தட்டு மக்களின் தொழில், மதிப்பில்லா தொழில்; இது தானே அவர்களை பற்றிய சமூகத்தின் பார்வை. உண்மை தான், சமூகம் நிச்சயமாகவே கோமாளிகளின் கூட்டமைப்பு தான்!

பல லட்சம் ஆண்டுகளாக நீண்ட, நெடியதொரு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறதாம் மனித சமூகம், அந்த பயணத்தின் முடிவின் காரணி என்னவாக இருக்க முடியும்?

தனி மனித மனசாட்சிகளால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், சமூகத்தின் மனசாட்சிகளுக்கு ஆணித்தரமாகவே அது தெரியும். விவசாய புறக்கணிப்பு, விவசாயிகள் அழிப்பு!

மிக கொடூர எதிரியோ, வேற்று கிரக வாசிகளோ, கொலைக்கார ஆயுதங்களோ தேவைப்படாது. மாபெரும் உணவு பஞ்சமும் , நஞ்சாகி போன உணவு பொருட்களையும் கொண்டு மனித இனமே தன்னை அழித்து கொள்ளும். வேடிக்கை!

முடிந்தால் விவசாயத்தையும், விவசாயிகளையும் அரவணைக்கவும், ஆதரிக்கவும், வளர்த்தெடுக்கவும் தொடங்குவோம். இல்லையேல் மனித சமூகத்தின் கடைசி நாட்களுக்காக நம்மை ஆயுத்தப்படுத்தி கொள்வோம்!

தைத்திருநாள் வாழ்த்துக்களை இப்பொழுதாவது சொல்லி விட தான் மனம் நினைக்கிறது, என்ன செய்ய அதை சொல்ல விடமால் மனசாட்சி தடுக்கிறது!

முடிந்தால் சிந்தியுங்கள்!

Tuesday, January 1, 2013

தனி மனித சுதந்திரம்!

தனி மனித சுதந்திரம் என்பது "தான் சமூகத்தின் ஒரு அங்கம்" என்ற பொறுப்புணர்வோடு புரிந்து கொள்ளப்பட வேண்டும்; சக மனிதர்கள், சமூகம், இயற்கை போன்றவற்றின் மீதான விளைவுகளை புறந்தள்ளி விட்டு தான்றோன்றி தனமாக செயல்படுவதற்கு பெயர் தனி மனித சுதந்திரமாக இருக்க முடியாது அதை காட்டுமிராண்டித்தனம் அல்லது சுயநலம் என்று வேண்டுமானால் அடையாள படுத்தி கொள்ளலாம்.