Friday, September 28, 2012

அணு மின் நிலைகள்; நாட்டின் உயிர் மின் நிலையங்கள்!



  • அந்நிய கம்பெனிகளுக்கு அடிமாடுகளாக தன்னையே தாரை வார்த்து விட்டு, குளிர் சாதன அறையில் உட்கார்ந்து நாட்டின் வளர்ச்சியை பற்றி அதிகம் கவலைப்படும் தொலை நோக்கு சிந்தனையாளர்களே,
  • வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு அநாதை இல்லத்திற்கு சென்று குத்தாட்டம் போட்டு தங்கள் சமூக பொறுப்புகளை நிறைவேற்றி விட்ட திருப்தியுடன் வெளியே வருகிற சமூக சேவகர்களே,
  • வீட்டை சுத்தமாக வைப்பதற்காக அனைத்து குப்பைகளையும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து பாதுகாப்பாக வெளியே போடுகின்ற இயற்கை ஆர்வலர்களே,
  • பத்திரிகையில் எழுதப்படுகின்ற முதன்மை செய்திகளும், தலையங்கங்களும் மட்டும் தான் அரசியல் என்று நம்பும் அரசியல் வித்தகர்களே,
  • வீட்டில் உள்ள ஜன்னல், கதவு அனைத்தையும் அடைத்து, ஆல் அவுட் போட்டு, கொசு வலைக்குள் புகுந்து கொள்ளும் அசகாய சூரர்களே,
  • "தொழில்நுட்பம் மட்டும் தான் வளர்ச்சி"; என்று அடித்து சொல்லும் அகராதியை தலைமை பாடமாக மனனம் செய்து விட்டு வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் தொழில் நுட்ப வல்லுனர்களே; அறிவியல் அறிஞர்களே,
  • மக்கள் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் நன்மை, தீமைகளை உணர்ந்து கொள்ள மெனக்கெடாமல், மனதில் தோன்றிய சிந்தனைகள் அனைத்தையும், அதிகம் சாப்பிட்டு  வாந்தி எடுக்க துடிக்கும் டாஸ்மாக் குடிகாரன் போல, அதிகம் சிந்தித்ததை அப்பாவி மக்கள் மேல் செயல்படுத்த துடிக்கும் விஞ்ஞானிகளே,
  • பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு விழுந்திருந்தாலே எதோ கூகிள் நியூஸ் ல பார்த்த மாதிரி இருக்கேன்னு ஒதுங்கி போற ஈர நெஞ்சுகாரர்களே,
  • தன் வீட்டு ஏ.சி ஓடவில்லை என்றாலும் அதற்கு அணு எதிர்ப்பாளர்களும், அந்நிய சக்திகளும் தான் காரணம் என்ற உண்மையை இம்மி பிசகாமல் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கும் துப்பறியும் சிங்கங்களே,
  • எனக்கென்ன, எனக்கென்ன, எவன் செத்தா எனக்கென்ன, எவன் பொழச்சா எனக்கென்ன என்பதை மனசாட்சியின் காலர் டியுனாக வைத்து இருக்கும் அதி உத்தமர்களே,
  • கடைசியாக, அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மற்றும் தாங்கள் சந்திக்கும் அனைவரும் தங்களை போலவே ரொம்ப நல்லவர்கள் என்ற நினைப்பில் எடுத்தார் கைப்பிள்ளையாக, சூது வாது தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் அப்பாவிகளே அன்பர்களே,

நீங்கள் எல்லாரும் ஒன்னா  சேர்ந்து, 

"அணு மின் நிலைகள்; நாட்டின் உயிர் மின் நிலையங்கள்"

"மின்சாரத்திற்கு எதற்கு சிக்கனம், அணு மின் நிலையம் வேண்டும் இக்கணம்"

" வீட்டிற்கு ஒரு அணு மின் நிலையம் வைப்போம், பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் விற்போம் "

போன்ற பல்வேறு அம்ச திட்டங்களை முன் வைத்து, வீதியில் இறங்கி, அரசாங்கத்திடம் போராடி, விஞ்ஞானிகளிடம் மன்றாடி, உங்கள் வீட்டு தோட்டத்தில், மொட்டை மாடியில், கார் பார்க்கிங்கில், பரணையில், கக்கூஸில், விவசாய நிலங்களில், தெரு முனையில் மற்றும் உங்களுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் அணு உலைகளை நிறுவி அதில் இருந்து தயாராகும் மின்சாரத்தை முழுவதுமாக ஏப்பம் விட்டு கொள்ளுங்கள், உங்களை யாரும் ஒன்றும் கேட்க மாட்டோம், உங்கள் போராட்த்தின் வெற்றிக்காக, நாங்களும், உங்களின் தோளோடு தோள் நின்று, இறுதி வரை போராடுகிறோம். 

ஜெய் ஹிந்த்!

பின் குறிப்பு: பக்கத்து இலைக்கு பாயசம் ஊத்த சொன்னா பரவாயில்ல பாஸ், பாய்சன் இல்ல ஊத்த சொல்றீங்க, கொஞ்சம் யோசிங்க அடுத்து உங்க இலை தான்! 


Sunday, September 23, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 4


உங்கள் விருப்பம், சமூக நோய்களுக்கு வலி நிவாரணிகளை தயார் செய்வது என்றால் சமூக தொண்டாற்றுங்கள், அதை முற்றிலுமாக குணமாக்குவது என்றால் அரசியலில் இணையுங்கள். "Politics is the last refugee of the scoundrels" "அயோக்கியர்களின் இறுதி அடைக்கலம் அரசியல்" என்று அரசியலை ஒதுக்கி வைத்து பார்ப்பது அடிமாடுகளாக வாழ்வதை போன்றது. 

பட்ட மரங்களாக, பல நூறு ஆண்டுகள் மண்ணில் நின்று கொண்டிருப்பதை விட, வீரியமிக்க இளம் விதைகளாக மண்ணிற்குள் புதைக்கபடுவது உத்தமம். 

முடிந்தால் சிந்தியுங்கள்! 

Tuesday, September 18, 2012

நீயும் என் எதிரியே!

நீ கேட்கும் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை என்றால், நீயும் என் எதிரியே!

#சமூகத்தின் இன்றைய நிலை!

அணு உலை பொய்களின் தொகுப்பு - 1!


உலகெங்கிலும் அணு உலைகளை மையமாக வைத்து கூறப்படும் பொய்களின் தொகுப்பு. சிந்திக்க தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைகிறேன். 

1 . அணு உலைகளில் இருந்து கதிர் வீச்சு அபாயம் இல்லை 

2 . கவலை படாதீர்கள், செர்னோபில் கதிர்வீச்சு அபாயம் பிரெஞ்சு எல்லைகளுக்குள் இருந்து சென்று விட்டது: அனைத்து பிரஞ்சு நாளிதழ்களும் 1986 'ல் பதிவு செய்தது.

3 . மனிதனுக்காக மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு வசதியும் பொய்யானதில்லை: செர்னோபில் பேரழிவு ஏற்பட்டு கொண்டிருக்கும் போது ஒரு அறிவாளி சொல்லியது

4 . கதிர்வீச்சை பற்றி பயப்பட வேண்டியதில்லை, உங்கள் ஜன்னல்களில் பேப்பர்களை கொண்டு அடைத்து விடுங்கள் அதுவே போதும்

5 . நீங்கள் சிரித்து கொண்டு இருந்தால் கதிர்வீச்சு உங்களை ஒன்றும் செய்யாது : யமஷிட்டா

6 . அணு சக்தி அமைதிக்கானது

7 . அணு சக்தி என்பது பாதுகாப்பான, சுத்தமான, மலிவான ஒரு தொழில் நுட்பம்

- தொடரும்

ஜனரேஷன்!

ஒரு நண்பனுடன் சாட்டில் உரையாடி கொண்டிருக்கும் போது கேட்டான், 
ஏன் அணு உலையை எதிர்கிறாய் என்று? புகுஷிமா என்ற வார்த்தையை சொல்ல ஆரம்பித்தான், அது முதல் ஜனரேஷன், இது முன்றாம் ஜனரேஷன் என்றான் உடனடியாக, நினைத்து கொண்டேன் 2030 'ல் எங்கோ அணு உலைக்கு எதிராக மக்கள் போராடி கொண்டிருக்கும் போது என் நண்பனை போலவே வேறொருவன் அந்த மக்களை பார்த்து சொல்வான் அது முன்றாம் ஜனரேஷன், இது ... 

வளர்ச்சி எனும் கண்ணாம்பூச்சி!


மனித தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க தெரிந்தவன், அந்த தவறால் பிரிந்த உயிரின் வலியையும், சிதைந்த உயிரின் வேதனையையும், பிரிந்த   குடும்பங்களின் துயரத்தையும் என்றுமே உணருவதில்லை. 
சிலரின் வளர்ச்சி என்ற கண்ணாம்பூச்சி விளையாட்டில் பலரின் வீழ்சிகள் ஒளிக்கபடுகின்றன!

Monday, September 17, 2012

வளர்ச்சி - என் டைரியிலிருந்து - 1 ( ஆண்டு - 2010 )




அன்று சனிக்கிழமை, வேலை செய்து கொண்டிருந்ததோ ஒரு சீன கம்பெனியில், பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும்,  சீன கம்பெனிகளை பொறுத்த வரை சனி, ஞாயிறு என்பது எல்லாம் இல்லை என்று, வேறு வழி இல்லாமல் அலுவலகத்திற்கு சென்று வேலையில் ஈடுபட்டிருந்தேன். ஹவுஸ்கீப்பிங்  பணியாளர்கள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள், அவர்களில் ஒருவர் என்னருகே பணியில் ஈடுபட்டு இருந்தார், சுமார் நாற்பது வயதிருக்கும், தமிழ்நாட்டை சேர்ந்தவர், வயிற்று பிழைப்பிற்காக பெங்களூரில் குடியேறியதாக கேள்விப்பட்டேன். அவர் அருகில் வந்ததும் அவரை பார்த்து புன்னகைத்தேன், அவரும் மரியாதையை நிமித்தமாக புன்னகைத்தார், என்ன நினைத்தாரோ தெரியவில்லை,  திடீரென சுத்தபடுத்துவதை நிறுத்தி விட்டு மனம் விட்டு பேச ஆரம்பித்தார், முதலில் அவருக்கும் ஆங்கிலம் தெரியும் என ஆங்கிலத்தில் பேசி காண்பித்தார், எவ்வளவோ இயந்திரங்கள் நிர்வாகத்திடம் இருந்தும் எங்களை வருத்தி வேலை வாங்குகின்றனர் என்றார், அமைதியாக கேட்டு கொண்டிருந்தேன், வேலையை தொடர்ந்து கொண்டே இரண்டாயிரம் தான் தருகிறார்கள், பி. எப் எண்ணை வேறு மறந்து விட்டேன், வீதியில் கூட பிறந்து விடலாம், தானே ராஜா தானே மந்திரி என்று வாழலாம், குப்பையை பொறுக்கி கூட நாளொன்றுக்கு  இருநூறு ருபாய் வரை சம்பாதித்து விடலாம்,  ஆனால் ஏழையாக மட்டும் பிறக்க கூடாது, வாழவும் முடியாது, சாகவும் முடியாது என்று சொல்லி கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார், பதிலேதும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன், உண்மையை சொல்ல போனால் கூனிக்குறுகி போயிருந்தேன். அந்த மனிதரின் நிலைக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை, சுளையாக  நாற்பத்தைந்தாயிரம் வாங்குவதை நினைத்து என் உடல் கூசியது. அந்த மனிதனின் துன்பத்திற்கு நானும் ஒரு காரணம்!
எப்படி என்று சொல்ல தெரியவில்லை என்றாலும் மனசாட்சி கண்டிப்புடன் சொல்லி விட்டது,   

நிச்சயமாக நீயும் ஒரு காரணம்!

மாதத்திற்கு இரண்டு லட்சங்களை சம்பாதிபவர்களும் அவர்களை விட நூறு மடங்கு குறைவாக இரண்டாயிரம் சம்பாதிபவர்களும் ஒரே கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருகிறார்கள், ஏன் இந்த எற்றத்தாழ்வு? 

இதற்கு பெயர் தான் வளர்ச்சியோ! 

அப்படி தான் போல, இந்த முட்டாளின் அறிவிற்கு தான் அதை எட்டி பிடிக்கும் சக்தி இல்லை, இருந்தாலும் முட்டாளாகவே இருந்து விட கூடாது என்ற காரணத்தினால்,  நாற்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வதற்கும் வழி இல்லாமல், சாவதற்கும் அனுமதிக்கபடாமல் விரக்தியுடன் வாழ்வதற்கு பெயர் தான் வளர்ச்சி என்பதை தெளிவாக என் அறிவில் வெளியே சென்று விட முடியாதவாறு அடைத்து வைத்து கொண்டேன்.

ஒன்றை மனதில் நிறுத்தி கொண்டேன், என்னை கூனிக்குறுக வைத்த கடவுளை ஒரு நாள் சந்திக்கும் போது அவன் கழுத்தை நெரித்து கேட்க வேண்டும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு என்று? 
என்னை போலவே பதில் தெரியாமல் அவனும் கூனிக்குறுகி போயிருப்பான்!     
       

Friday, September 14, 2012

என் குல சாமி ஆவாரா கலாம்?



வெகு காலமாக அப்துல் கலாமை விமர்சித்ததற்காக பல பேரின் கண்டனத்திற்கு ஆளாகினேன், இருந்தாலும் அப்துல் கலாமை எப்படி நீ சொல்லலாம் என்ன திரும்ப பல அறிவு ஜீவிகள் பதிவுகளை போடுவதால் இந்த பதிவு!

கூடங்குளத்தில் உள்ள அணு உலைகளை அளிப்பது ரஷ்ய நாட்டை சேர்ந்த நிறுவனம், இன்று வரை அவர்கள் நாட்டில் தயாரித்த அணு உலையில் ஏற்பட கூடிய விபத்துக்கு பொறுபேற்க தயாராய் இல்லை, அப்படி இழப்பிடு தர வேண்டும் என்ற கட்டாயம் இருந
்தால் நாங்கள் இதை விற்க தயாராய் இல்லை என்பதை தெளிவு படுத்திய பின்பு வேறு வழி இல்லாமல் இந்திய மக்களின் வரி பணத்தின் மூலமாக இழப்பீடு கொடுத்து கொள்ளலாம் என்ற தான்றோன்றி தனமாக முடிவெடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியது, தயாரிப்பாளரே பிரச்சனைக்கு பொறுபேற்க விருப்பமில்லாத ஒரு தொழில் நுட்பத்திற்கு தான் நமது அறிவியல் ஞானி மாண்புமிகு திரு அப்துல் கலாம் அவர்கள் 100௦௦% பாதுகாப்பானது என்று உத்தரவாதம் கொடுத்திருகிறார், இதை அவர் ரஷ்ய கம்பெனியிடம் சொல்லி நமக்கு இழப்பிடு வாங்கி தரும் படி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்து இருந்தால் கூட அவரை தூக்கி வைத்து கொண்டாடி இருக்கலாம், சாதாரண மக்களிடம், அவரை ஒரு அறிவாளியாக, தலைவராக, ரோல் மாடலாக நினைக்கும் பல கோடி மக்களின் முன் சொல்கிறார் அணு உலை 100௦% பாதுகாப்பானது என்று! இதை நான் இரண்டு விதமாக பார்கிறேன், ஒன்று இதை கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு கோமாளியாக அப்துல் கலாம் இருக்கலாம், அப்படி இல்லை தன்னை நம்பி இருக்கும் மக்களை கோமாளியாக ஆக்கி காரியத்தை சாதித்து கொள்ள கூடிய ஒரு குள்ள நரியாக இருக்கலாம். ஆக அப்துல் கலாமை சாடுவதில் எந்த தவறும் இல்லை என்பதை இதன் மூலம் அப்துல்கலாமை தெய்வமாக நினைத்து கொண்டிருக்கும் அன்பிற்கினிய, அப்பாவி உள்ளங்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன். உங்களை நான் பரிதாபப்பட்ட பிறவிகளாக தான் பார்க்கிறேனே தவிர எதிரியாக அல்ல.

பின் குறிப்பு:
இதற்கு கோபமாக பதில் பதிவு போட விரும்பும் நண்பர்களுக்கு, ரஷ்யாவிற்கு எங்கள் சொந்த பணத்தில் டிக்கெட் எடுத்து கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், அப்துல் கலாமுடன் நீங்களும் சென்று இந்திய மக்களுக்காக இழப்பிட்டை வாங்கி தந்து விட்டு உங்களால் எந்த அளவு என்னை கீழ்த்தரமாக திட முடியுமோ திட்டி கொள்ளுங்கள். உங்களையும், கலாமையையும் குல சாமியாக என் கடைசி மூச்சு வரை என் வீ
ட்டு பூஜை அறையில் வைத்து கும்புடுகிறேன்.

கம்யுனிஸ்டுகள் ஒன்றும் பச்சோந்திகள் அல்ல!



கம்யுனிஸ்டுகள், ஜெய்தாபுரில் இருக்கும் அணு மின் நிலையத்தை அழிவு திட்டமாகவும், கூடங்குளத்தில் இருக்கும் அணுமின் நிலையத்தை வளர்ச்சி திட்டமாகவும் பார்ப்பது எவ்வளவு நியாயமான ஒன்று என்று சில நிமிடங்களுக்கு முன்பு தான் புரிந்தது, அவர்களை பச்சோந்திகள் என பழிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்க ஒன்று, அவர்கள் சொல்வது ரஷ்யாவில் உலை வாங்காமல் அவர்கள் பொருளாதரத்தை அழிக்கிறீர்கள், ரஷ்யாவில் உலை வாங்கி அவர்களை வளர்
கிறீர்கள் என்று, உங்கள் அறியாமையால் அவர்கள் இந்தியாவை பற்றி தான் பேசுகிறார்கள் என்று புரிந்து கொண்டால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?
கம்யுனிஸ்டுகள் ஒன்றும் பச்சோந்திகள் அல்ல நண்பர்களே, பச்சை துரோகிகள்!
பின் குறிப்பு: சமுதாயம் மட்டும் நாட்டின் மீது அக்கறை உள்ள நல்ல கம்யுனிஸ்டுகள் மன்னிக்கவும், நான் உங்களை பற்றி பேசவில்லை..



இத கவிதைன்னு நான் சொல்லல!



கம்யூனிஸ்ட் கட்சிகளின் ரஷ்ய மோகம்,
இந்தியாவில் இவர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச,
மோகத்தையும்,
அழித்து விடும்,
போல இருக்கிறதே! 
அடடே ...! 
பச்சோந்தி பயலுக! 
சத்தியமா இத கவிதைன்னு, 
நான் சொல்லல, 
ஒரே லைன்ல எழுதி, 
போர் அடிச்சிடுச்சு,
அதான் இப்படி,
கோப படாதீங்க...!



Thursday, September 13, 2012

அறிவு ஜீவி சோ!



தீவிரவாதிகள் பொது மக்களை கேடயமாக பயன்படுத்தும் போது, மருத்துவமனையில் சென்று ஒளிந்து கொள்ளும் போது, ராணுவம் பொது மக்களை கொன்று விட்டு தீவிரவாதிகளை கொள்வது தவிர்க்க இயலாதது! அப்படி கொல்லப்பட்ட பொது மக்களின் சாவுக்கு தீவிரவாதிகள் தான் காரணமே தவிர, ராணுவமோ, அரசோ எந்த விதத்திலும் காரணம் இல்லை - சோ 
#சர்வாதிகார அரசோ, ராணுவமுமே கூட இது வரை தங்கள் மக்களின் மீது செயல் படுத்தாத ஒரு யுக்தியை இந்த அறிவு ஜீவ
ி சாதாரண விடயமாக பார்க்கிறார்! சில ஆயிரம் தீவிராவதிகளுக்காக ஒன்றரை லட்சம் பொது மக்களை கொன்றது மிக சாதாரண விடயமாம், ராணுவ நடவடிக்கையாம்.
ஆன்மிக தேசம், அகிம்சா தேசம், ஜனநாயக தேசம் என்றல்லாம் போற்றப்படும் ஒரு தேசத்தில் பத்திரிகை நடத்தி கொண்டிருக்கும் சோ என்ற முகமூடிக்குள் ஒளிந்திருப்பது ஒரு மனிதாபிமானமற்ற கொடிய பிணம் திண்ணி என்பதை ஒரு வாக்கியத்தில் வெளிப்படுத்தி விட்டார்.
தமிழனாக அல்ல, ஒரு சராசரி மனிதனாக உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.

வேதனையோடு
வி. எஸ். வினோத் குமார்

காந்திய வழி!

தடியடியை தாங்கி கொண்டு காந்திய வழியில் போராடும் போராட்ட குழுவினர் ஒவ்வொருவரும் சுபாஷ் சந்திர போஸின் வீரமும், காந்தியின் மன திடத்தையும் உடையவர்கள். வெட்கமே இல்லாமல் வன்முறையை கட்டவிழ்க்கும் அரசும், காவல் துறையும் மனிதத்தின் அவமான சின்னங்கள்.

மனித உரிமை மீறல்கள்!

மனித உரிமை மீறல்கள் எந்த காரணகளுக்காகவும் நியாபடுத்துவதை அனுமதிக்க முடியாது. சராசரி மனிதனாக அதை எதிர்க்க கூட திராணியற்ற ஒவ்வொருவனும் வெட்கி தலை குனிய வேண்டும்.

உதயகுமாரன்!



கிராமங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளையே அருவாளுடனும், நாட்டு தூப்பாக்கிகளுடனும், நாட்டு வெடிகுண்டுகளுடனும் அணுகும் மக்களை தடி அடிகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையும் வாங்கி கொண்டு அற வழியில் போராட பண்படுத்தி விட்ட சுப உதயகுமாரன் ஈடு இனையற்ற தலைவராக நெஞ்சில் நின்று விட்டார். இவரது கால் தூசிக்கு பெறாதவர்கள் முதலமைச்சராகவும், பிரதமராகவும் இருப்பது நமக்கு ஏற்படுள்ள சாப கேடு. பொய் பிரச்சாரங்கள் மூலமும், வன்முறை மூலமும் உண்மையாக்கபட்ட பொய்கள் என்றும் நிலைத்ததில்லை .

காட்டேரிகளின் கோமாளி தந்திரம்!

அச்சத்தை ஏற்படுத்தி அச்சத்தை போக்குவதற்கு பெயர் தான் ராஜதந்திரம் என்றால் அந்த தந்திரத்தை செயல்படுத்தும் ராஜா கோமாளியாகவும், காட்டேரியாகவும் தான் இருக்க முடியும்! வெட்க கேடு.

கூடங்குளம் அடக்குமுறை!




தனது கோர முகத்தை வெட்ட வெளிச்சமாக்கிய ஜெயலலிதாவுக்கும், பிணம் தின்னிகள் போல் செயல்பட்ட தமிழக காவல் துறைக்கும் ஒரு தனி மனிதனாக எனது தீவிரமான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நண்பர்கள் அவர்கள் கண்டனங்களை நாகரீகமான முறையில் பதிவு செய்யவும்.

காவலர்களுக்கு பாதுகாப்பில்லை!



வெறும் கையுடன்,குழந்தைகளுடனும் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த மக்களிடம் இருந்து, துப்பாக்கி, வெடி குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள், கவச உடை, லத்தி அனைத்தையும் வைத்து கொண்டிருக்கும் காவலர்களுக்கு பாதுகாப்பில்லையாம்! கேட்கும் போதே ரத்தம் சூடாகிறது, உதயகுமாரன் போன்ற அகிம்சையை நம்ப கூடிய தலைவர்கள் மட்டும் இல்லை என்றால் எத்தனை காவலர்கள் உயிர் இழந்து இருக்க கூடும் என்பதை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. அகிம்சையை நம்பியவர்கள் தோற்றதில்லை, தூண்டுதலுக்கு ஆளாகாமல் அமைதி வழியில் தொடர்ந்து போராடுவோம். அரசாங்கம் மற்றும் உளவு துறையின் ராஜதந்திர முயற்சிகளை அமைதி வழியில் நின்று முறியடிப்போம், போது மக்களிடம் இருந்து நமக்கான ஆதரவை அதிகரிப்போம்.


அரசியல்வாதிகளின் பொய் பிரச்சாரங்கள்!



எக்கச்சமான உளவு பிரிவிகளையும், விசாரணை அமைப்புகளையும், ஆயுத படைகளையும் வைத்து கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள், வெளி நாட்டு அமைப்புகள் மூலம் பணம் பெறுவதாக பிரச்சாரம் செய்து கொச்சைபடுத்தபடும் உதயகுமாருக்கு எதிராக எந்த வித ஆதாரத்தை இன்று வரை கொடுக்க முடியாததன் மூலமே தெரியும் அரசியல்வாதிகளின் குள்ளநரி தனத்தை. பொய் பிரச்சாரங்களை செய்கிறார் பிரதமர் என அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குக்கு இன்று வரை பதில் தர வில்லை. உண்மையை பேசுபவர்களை கொச்சை படுத்தி தங்கள் காரியத்தை சாதித்து கொள்ளும் கீழ்த்தனமான செயலை என்று அரசியல்வாதிகள் நிறுத்திகிறார்களோ அன்று தான் மக்கள் இந்திய அரசியல் வாதிகளையும், அரசியல் அமைப்பையும் நம்ப தொடங்குவார்கள்.


வாலாட்டிகள்!



ஒத்த கருத்துகளில் சேர்ந்தும், எதிர் கருத்துகளில் பிரிந்தும் செயல் பட வேண்டியது மனிதனாக பிறந்த ஒவ்வொருவனின் கடமை, உரிமை, அவசியம். அதை விட்டு எல்லா நேரத்திலும் சொம்பு பிடித்து கொண்டும், முதுகு தேய்த்து கொண்டும் இருப்பவர்கள் கண்ணியமான மனிதர்கள் அல்ல, வாலாட்டிகள்.

பதவி ஒரு கேடு!



தனது கட்சியை சேர்ந்த சொம்பு தூக்கிகள் இறந்தால் நீண்ட அறிக்கையின் மூலம் தனது இரங்கலையும், அவரது குடும்பத்துக்கு ஆதரவையும் தெரிவிக்கும் அம்மா, கொடூரமாக தடி அடி, துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டுகள் போன்றவற்றை கையாண்டு கொன்ற ஒருவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து சரி கட்டி ஒதுங்கி விட முயலுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடந்த அனைத்து அசம்பாவிதங்களுக்கும் முழுமையான பொறுப்பு அதை நடத்தியவர்களுக்கு தான் உண்டு என்பதை உணராதவருக்கு பதவி ஒரு கேடு.

சட்டத்தை செயல்படுத்த சட்டம்!

சுதந்திர போராட்டம் என்பது வெள்ளைகாரர்கள் நம்மை அடிமை படுத்திய காலம், தற்கால போரட்டங்கள் என்பது கொள்ளை காரர்கள் நம்மை அடிமைபடுத்தி கொண்டிருக்கும் காலம். பூவுலகின் நண்பர்கள் திரு சுந்தரராஜனின் கருத்து மிக நுண்ணியமானது, இன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்தை சட்டபடி நடக்க வைப்பதற்கே சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது. அணு சக்தி கழகம் புகுஷிமா விபத்துக்கு பிறகு விதித்த 17 விதிகளை முழுவதுமாக செயல் படுத்தி விட்டு அணு உலையை செயல் படுத்துங்கள் என்று சொல்வதற்கே உயர் நீதி மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர வேண்டி இருக்கிறது. 

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்.

ஆட்சி மாற்றம்!

ஒரு பத்து வருட காலத்துக்கு, இந்திய அரசியலில் வருடத்துக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் என்ற நிலையை கொண்டு வந்தால் தான் நம் ஆட்சியாளர்களுக்கு புத்தி வரும் என்று நினைகிறேன்.

நம்பிக்கையின் மிச்சம்!



கடலுக்குள் இறங்கி அமைதி வழியில் போராடும் இடிந்தகரை மக்கள்! பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று பாரபட்சமில்லாமல் ஜனநாயகத்தின் மீதான நம்பிகையை இன்னும் இழந்து விடாமல் போராடுவதை பார்க்கும் போதே சிலிர்கிறது!

Monday, September 10, 2012

அணு உலை போராட்டத்துக்கு எதிரான கபட நாடகம்!




ஏவுகணை தாக்குதலுக்கு ஒன்றும் ஆகாத அணு உலை, ஏரோப்ளேன் விழுந்தால் ஒன்றும் ஆகாத அணு உலை, சுனாமி வந்தால் ஒன்றும் ஆகாத அணு உலை, பூகம்பம் வந்தால் ஒன்றும் ஆகாத அணு உலை, நிராயுதபாணி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அருகில் சென்றாலே விபத்து ஏற்படும், பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் தடியடி நடத்தி முன்று உயிர்களை பலி வாங்கினோம், பல ஆயிரம் பேரை பழி வாங்கினோம்! வாழ்க இந்திய ஜனநாயகம்.

அன்புடன்,
வி. எஸ்.  வினோத் குமார்

மாய வலையா, சாப வலையா!


அணு உலை எதிர்பாளர்களின் மாய வலையில் யாரும் விழவில்லை, ஓட்டு பொறுக்கி அரசியல் வாதிகளின் சாப வலையில் தான் இந்திய மக்கள் விழுந்துள்ளனர். 

அன்புடன், 
வி. எஸ்.  வினோத் குமார் 

ஓட்டு வங்கியும், மாய வலையும்!




ஓட்டு வங்கிக்காக மட்டும் உங்களில் ஒருத்தியாக இருப்பவர்களுக்கு, தேவைகள் முடிந்தவுடன் உண்மைகள் மாய வலையாக தான் தோன்றும் போல!

அன்புடன்,
வி. எஸ்.  வினோத் குமார்

மலிவான உயிர்கள்!




மனித உயிர்கள் மலிவாக பார்க்கப்படும் பொது இந்த சமுதாயத்தின் மீது கட்டுபடுத்த முடியாத ஒரு கோபம் வருகிறது. எனது வாழ்வை தீர்மானித்து கொள்ளும் உரிமை எனக்கு 200 % சதவிகிதம் இருக்கிறது, யாரும் மறுக்க முடியாது! ஆனால் எனது வளர்சிக்காக பிறர் வாழ்வாதரங்களை அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? டினோசர்களும், காட்ஜில்லாக்களும், சுனாமியும், பூகம்பமும், எரிமலைகளும் இந்த உலகுக்கு ஏற்படுத்துவதாக திரை படங்களில் காட்டப்படும் அழிவை விட மனிதன் தன் சுய நலத்தின் மூலம் சிறிது சிறிதாக ஏற்படுத்தி வருகிறான். உலகின் முடிவு கண்டிப்பாக மனிதனால் தான் ஏற்பட போகிறது என்பதை சத்தியம் செய்து சொல்லலாம். 

மனிதன் முதலில் மனிதனாக வாழ கற்று கொள்ளட்டும், பிறகு அறிவியல் அறிஞ்சராகவோ, மருத்துவராகவோ, வக்கீலாகவோ என்னவாக வேண்டுமானாலும் ஆகி விட்டு போகட்டும்.

அன்புடன், 
வி. எஸ்.  வினோத் குமார் 







Saturday, September 8, 2012

செதுக்கப்படுகிறேன், மனிதனாக!




இருபத்தாறு வருடங்களாக பயனற்ற, வடிவமற்ற பாறையாக ஏக்கத்தோடும், இயலாமையோடும் இருந்த என்னை, சிறிது காலமாக பல சிறு சிறு உளிகளை கொண்டு இந்த சமூகம் செதுக்க ஆரம்பித்திருப்பதாக உணருகிறேன்! எனக்கான தளமும், நோக்கங்களும் தெளிவாகும் போது ஏக்கங்களும், இயலாமையும் பலம் இழக்கின்றன! பாலைவனத்தில் விதைக்கப்பட்ட விதையாய் பரிதவித்த மனசாட்சியும், ஆன்மாவும் புதிதாய் பெய்த மழையில் துளிர் விடும் ஆரம்பிக்கும் விருட்சம் போல் எழ ஆரம்பித்து இருக்கின்றன. வீழ்ச்சிகளும், தோல்விகளும் அன்றாட நிகழ்வான வாழ்கையில், வீழ்ச்சிகளும், தோல்விகளும் சந்தர்பங்களுக்கு தானே தவிர மனதுக்கோ, உடம்புகோ, ஆன்மாவுக்கோ அல்ல என்பது தெள்ள தெளிவாகி விட்டது. பல கடினமான நேரங்களில், வாழ்கை ஓட்டத்தில் என்னை இழந்து விடாமல் தடுக்க உதவிய அனைத்து நண்பர்களுக்கும், என்னை எதிரியாக நினைத்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாரதியின் வழியில், தினம் தினம் புதியதாய் பிறக்க மட்டுமல்லாமல், மனிதனாகவும் பிறக்க கற்று கொண்டு விட்டேன் என நினைக்கிறேன். வலிகளுக்கு ஊடே  செதுக்கப்படுகிறேன், ரத்தமும், சதையும் கொண்ட பிண்டமாக அல்ல, மனசாட்சியும், ஆன்மாவும் கொண்ட மனிதனாக!  
இந்த உலகிற்கு விடுப்பு கொடுக்கும் முன்பு சமூகத்திற்கு என் பயனையும், உலகிற்கு என் வடிவத்தையும் காட்டி விட வேண்டும் என்ற உந்துதலோடு தொடர்கிறேன்! 

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்.

வலிகள்!



வலிகள் நம்மை வேதனைக்கு உட்படுத்த அல்ல,
நம் தன்மைகளை சோதனைக்கு உட்படுத்த!

அன்புடன்,
வி எஸ்  வினோத் குமார்